‘சாதி, மத அரசியல் நமக்கு வேண்டாம்’ - பாஜக குறித்து முதல் மாநாட்டில் அண்ணாமலை பேசியது என்ன?

சாதி, மதத்தை வைத்து செய்யும் சாக்கடை அரசியல் நமக்கு வேண்டாம்.
‘சாதி, மத அரசியல் நமக்கு வேண்டாம்’ - பாஜக குறித்து முதல் மாநாட்டில் அண்ணாமலை பேசியது என்ன?
Published on

வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவரான அண்ணாமலை, இன்று தனது இயக்கத்தில் முதல் மாநாட்டை ‘போதையில்லா தமிழகம்’ என்ற பெயரில் கோவையில் நடத்தினார். இதில் அடுத்த ஆறு மாதத்திற்கான இயக்கத்தின் இலக்கு, அரசியல் வருகை, தவெக உள்ளிட்டவை குறித்துப் பேசினார். மேலும் பாஜக குறித்து பேசிய அண்ணாமலை.,

“பாஜக நான் சார்ந்திருந்த கட்சி. இன்று பாஜக, அதிமுக, திமுக கட்சியை சேர்ந்த பலர் இங்கு வந்துள்ளனர். ஒரு கட்சியில் இருந்து வெளியே வருவதற்கு காரணம் கோபம் ஒருபக்கம். அதனை காட்டுவதற்கு கட்சியை விட்டு வெளியே வருகிறோம். தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் சிறப்பாக செய்ய ஒருபாதை இருக்கும்போது அதை தேர்ந்தெடுக்கிறோம். யாரைப்பற்றியும் 38 நாட்கள் தவறாக பேசவில்லை. அதனால் திமுகவிற்கு சந்தேகம், நான் பாஜகவின் பி டீம் என.

அடிப்படையில் நான் ஒரு எளிய குடும்பத்தை சார்ந்தவர்கள். நாம் ஒரு இடத்திலிருந்து வெளியேவரும்போது ஒருவர்மீது பழிசுமத்தி வரமாட்டோம். நான் ஒரு தேசியவாதி. இந்தியன் என்பதில் ஒரு கர்வம், அதில் தமிழ்நாடு முன்னிலையில் வரவேண்டும் என்பதற்காக இந்த போராட்டம். நான் ஒரு இந்து. வீட்டிலிருந்து வெளியேவரும்போது மதம், சாதியை பூட்டிவைத்துவிட்டு, சாமானிய மனிதனாக வெளியேவருகிறேன்.

மதத்தை தூக்கிப்பிடித்து காட்டவேண்டிய அவசியம் எனக்கில்லை. உண்மையான இந்து அனைவரையும் சமமாக பார்ப்பான். அனைவரோடும் சமமாக இருப்பான். அதுதான் என்னுடைய இந்துத்துவா தத்துவம். இனாம் நிலத்திற்கும், கோயில் சொத்திற்கும் சம்மந்தமில்லை. இதற்கு எனக்கு கிடைத்துள்ள பட்டம் இந்து விரோதி.

2024-ல் ஹெச்.ராஜா இனாம் நிலத்தை மக்களுக்கு கொடுக்கவேண்டும் என்றார், 2026-ல் தேர்தல் அறிக்கையை அந்த நிலத்தை அங்கிருக்கும் மக்களுக்கு கொடுக்கவேண்டும் என இபிஎஸ் கூறினார். இவர்கள் இந்து விரோதிகள் அல்ல, நான் இந்து விரோதி.

இன்று அறுதியிட்டு ஒன்று சொல்கிறேன். சாதி, மதம் என்பது இந்த அமைப்புக்கு வெளியே. சாதி, மதத்தை வைத்து இத்தனை ஆண்டுகள் செய்த அரசியல் போதும். அந்த அரசியல் நமக்கு வேண்டாம். அந்த சாக்கடை அரசியலுக்குள் போகவேண்டாம். ஒருங்கிணைந்த இந்தியா, முதன்மை தமிழ்நாடு என்பதுதான் நமது அரசியல்.” என தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com