search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு குறைவு- அதிகாரிகள் தகவல்
    X

    புழல் ஏரி

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு குறைவு- அதிகாரிகள் தகவல்

    • தென்மேற்கு பருவ மழையைவிட வடகிழக்கு பருவ மழை மூலம் தான் தமிழகம் அதிகம் பயனடையும்.
    • வருகிற அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவ மழை மூலம் தமிழகத்துக்கு கூடுதலாக நீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ் தற்போது நீர் திறப்பு நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பூண்டி ஏரியில் இருந்து குடிநீர் தேவைக்காக சராசரியாக நாள் ஒன்றுக்கு 80 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் வரத்து கால்வாய்கள் மூலம் 40 கன அடி நீர் வருகிறது. குடிநீர் வழங்கும் ஏரிகளில் 3 ஆயிரத்து 291 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 543 மில்லியன் கன அடியும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 134 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2 ஆயிரத்து 908 மில்லியன் கன அடியும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரியில் 500 மில்லியன் கன அடியும் நீர் நிரம்பி உள்ளது.

    அதேபோல், 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3 ஆயிரத்து 48 மில்லியன் கன அடியும், இதுதவிர 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 1,465 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் 16.81 சதவீதமும், சோழவரத்தில் 12.40 சதவீதமும், புழல் ஏரியில் 88.12 சதவீதமும், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரியில் 100 சதவீதமும், செம்பரம்பாக்கம் ஏரியில் 83.62 சதவீதமும், வீராணம் ஏரியில் 100 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது. சராசரி யாக அனைத்து ஏரிகளிலும் 65.03 சதவீதம் இருப்பு உள்ளது. அனைத்து ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடியில் (13.22 டி.எம்.சி.). தற்போது 8 ஆயிரத்து 598 மில்லியன் கன அடி (8.59 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது.

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஏரிகளில் 10,515.20 மில்லியன் கன அடி (10.51 டி.எம்.சி.) இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது நீர் இருப்பு குறைவாகவே உள்ளது.

    தென்மேற்கு பருவ மழையைவிட வடகிழக்கு பருவ மழை மூலம் தான் தமிழகம் அதிகம் பயனடையும். வருகிற அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவ மழை மூலம் தமிழகத்துக்கு கூடுதலாக நீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் பூண்டி மற்றும் சோழவரம் ஏரிகளில் போதிய நீர் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மாநகரில் 906 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    மேற்கண்ட தகவல்களை நீர் வளத்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×