search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாபநாசம் அணை நீர்மட்டம் 110 அடியை நெருங்கியது
    X

    களக்காடு தலையணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய காட்சி.

    பாபநாசம் அணை நீர்மட்டம் 110 அடியை நெருங்கியது

    • களக்காடு, திருக்குறுங்குடி, நாங்குநேரி, அம்பை, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
    • மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக வடகிழக்கு பருவமழை சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பாபநாசம் மற்றும் சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரையிலும் பரவலாக மழை பெய்தது.

    குறிப்பாக மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 23.4 மில்லிமீட்டர் மழை கொட்டியது. இதனால் மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. சுமார் 1 மாதமாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது.

    118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 76.40 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 488 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் 109.10 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 121 அடியாகவும் இருக்கிறது. இந்த அணைகள் நீர்மட்டங்கள் தலா 1/2 அடி உயர்ந்துள்ளது.

    இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 920 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து வினாடிக்கு 504 கனஅடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது. பாபநாசத்தில் 12 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 11 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தை பொறுத்தவரை களக்காடு, திருக்குறுங்குடி, நாங்குநேரி, அம்பை, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்றும் காலையில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 700 குளங்கள் நிரம்பி உள்ளதால், விவசாய பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் தொடர்ந்து மழை பெய்து நீர் வரத்து அதிகரித்ததினால் இன்று தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தலையணை சூழல் சுற்றுலா பகுதிகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என வனத்துறை தெரிவித்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி, பாவூர்சத்திரம், திரவியம் நகர் உள்ளிட்ட இடங்களில் இரவில் பரவலாக மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக ராமநதியில் 6 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 0.5 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 78 அடியாகவும், கடனா அணை நீர்மட்டம் 77.20 அடியாகவும் உள்ளது. கருப்பாநதி, குண்டாறு அணைகள் நிரம்பி வழிகிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    குற்றாலத்தை பொறுத்தவரை மலைப்பகுதியில் மழை பெய்தது. இதனால் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இன்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு குளிர்ந்த காற்றும் வீசுகிறது. மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஆனந்தமாக குளித்து வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 37 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் நேற்று இரவில் விட்டு விட்டு மழை பெய்தது.

    Next Story
    ×