search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பல்லடம் தனியார் வங்கியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
    X

    ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்


    பல்லடம் தனியார் வங்கியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

    • பல்லடம் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் பலர் வசிக்கின்றனர்.
    • பல்லடம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை -திருச்சி மெயின் ரோடு அருகே தனியார் வங்கி கிளை உள்ளது. வங்கியின் முன்புறம் ஏ.டி.எம். மையம் உள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு தங்களுக்கு தேவையான பணத்தை எடுத்து வந்தனர். வங்கியின் அருகே பல்லடம் போலீஸ் நிலையம் உள்ளது.

    இந்தநிலையில் இன்று காலை ஏ.டி.எம். மையத்திற்கு ஒருவர் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்குள்ள எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் மணி கண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பணம் கொள்ளை போனதா? என்பது தெரியவில்லை.

    இதைத்தொடர்ந்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். அவர் வந்து பார்வையிட்ட போது ஏ.டி.எம். எந்திரத்திற்குள் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் பணம் அப்படியே இருந்தது. பணம் எதுவும் கொள்ளைபோகவில்லை.

    வங்கி காவலாளி விடுமுறையில் சென்றிருந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை, இன்று சுதந்திர தினவிழா விடுமுறை என்பதால் வங்கி பூட்டப்பட்டு இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்மநபர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். ஏ.டி.எம். எந்திரத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள் எந்திரத்தை பாதி உடைத்த நிலையில் முழுமையாக உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சியை கைவிட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். அவர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ஏ.டி.எம். மையம் மற்றும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் கொள்ளையர்களின் உருவம் ஏதும் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    பல்லடம் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் பலர் வசிக்கின்றனர். எனவே அவர்கள் இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாமா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பல்லடம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    சுதந்திர தினத்தையொட்டி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். இருப்பினும் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ள சம்பவம் பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×