search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சசிகலா ஆதரவாளர்களுடன் இணைந்து செயல்படுங்கள்- மாவட்ட நிர்வாகிகளுக்கு ஓ.பி.எஸ். உத்தரவு
    X

    சசிகலா ஆதரவாளர்களுடன் இணைந்து செயல்படுங்கள்- மாவட்ட நிர்வாகிகளுக்கு ஓ.பி.எஸ். உத்தரவு

    • சில மாவட்டங்களில் சசிகலா, தினகரன் ஆகியோர் சென்றால் வரவேற்பு அளிக்கவும் முடிவு செய்துள்ளார்கள்.
    • சசிகலாவும் தனது ஆதரவாளர்களிடம் அ.தி.மு.க.வினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை திரட்டி பலப்படுத்தும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    கட்சியில் பின்னடைவை சந்தித்தது போல் கோர்ட்டு வழக்குகளிலும் தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருகிறார். இருப்பினும் அ.தி.மு.க.வை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பான்மையினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்.

    இது கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் வெளிப்படையாகவே தெரிந்தது. மொத்தமுள்ள 1,665 பேரில் 1,400 பேர் வரை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கையெழுத்து போட்டனர். இந்த ஆதாரங்களை எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளார். இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மாவட்ட செயலாளர்களில் ஒருவரான கோவை செல்வராஜ் கூறும்போது, 'விரைவில் பொதுக்குழு கூட்டம் நடத்தவும், பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். அடிமட்டத்தில் கட்சியை வலுப்படுத்தவும் பணிகளை வழங்கி இருக்கிறார்' என்றார்.

    இதற்கிடையில் சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களிடமும் இணைந்து செயல்படும்படி கூறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தேனி மாவட்டத்துக்கு சென்ற தினகரனுக்கு ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.

    மேலும் சில மாவட்டங்களில் சசிகலா, தினகரன் ஆகியோர் சென்றால் வரவேற்பு அளிக்கவும் முடிவு செய்துள்ளார்கள். சசிகலாவும் தனது ஆதரவாளர்களிடம் அ.தி.மு.க.வினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் சில மூத்த தலைவர்கள் ஓ.பி.எஸ்., சசிகலா எல்லோரும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று கட்சியை வலுப்படுத்த வர வேண்டும் என்று கூறி உள்ளார்கள்.

    Next Story
    ×