search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் மாற்று பாலின உணர்வாளர்கள் நடத்திய பிரமாண்ட பேரணி
    X

    ஆட்டம் பாட்டத்துடன் உற்சாமகாக பேரணியில் பங்கேற்றவர்கள்

    சென்னையில் மாற்று பாலின உணர்வாளர்கள் நடத்திய பிரமாண்ட பேரணி

    • நடுரோட்டில் அரங்கேறிய இந்த காட்சிகள் பார்ப்போரை முகம்சுளிக்க வைத்தது என்பது உண்மை.
    • ஆணும்-பெண்ணும் சேர்ந்தது தான் உலகம் என்பதை இந்த சமூகம் ஏற்றுக்கொண்டது.

    சென்னை:

    நம்மில் இப்படியும் பலர் வாழ்கிறார்கள் என்பதை சென்னையில் நேற்று நடைபெற்ற மாற்று பாலின உணர்வாளர்கள் நடத்திய பேரணி எடுத்துக்காட்டியது.

    எழும்பூர் லாங்க்ஸ் கார்டன் ரோட்டில் கூவம் ஆற்றங்கரை ஓரம் நடை பெற்ற இந்த பேரணி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று 3 மணி நேரத்துக்கும் மேலாக அமர்க்களமாக நடந்தது. பேரணியில் இளம் வயது ஆண்கள், பெண்கள், திருநங்கையர்கள் பெருமளவில் திரண்டு இருந்தனர். வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வந்திருந்தார்கள்.

    கவர்ச்சிக்கும், கண்ணை கவரும் நடனங்களுக்கும் பஞ்சமில்லை. ஆண்களும், ஆண்களும் முத்தமிட்டும். பெண்களும், பெண்களும், ஆணும், பெண்ணும் முத்த மிட்டும் அன்பை பரிமாறிக் கொண்டார்கள். பலர் அரைகுறை ஆடையுடன் மிக கவர்ச்சியாக வந்திருந்தனர்.

    நடுரோட்டில் அரங்கேறிய இந்த காட்சிகள் பார்ப்போரை முகம்சுளிக்க வைத்தது என்பது உண்மை. அதையும் தாண்டி அவர்களது வாழ்க்கையையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தியதை சமூகம் வெறுக்க கூடாது. அங்கீகரிக்க வேண்டும். ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் முன்வைத்த கோரிக்கை தான் இந்த பேரணியின் 'ஹைலைட்'.

    ஆணும்-பெண்ணும் சேர்ந்தது தான் உலகம் என்பதை இந்த சமூகம் ஏற்றுக்கொண்டது. இந்த இரு பாலருக்கும் இடையேயான பாலுணர்வுதான் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    ஆனால் பெண்ணும், பெண்ணும் ஈர்க்கப்படும் லெஸ்பியன் உணர்வு, உறவு. ஆணும்-ஆணும் ஈர்க்கப்படும் தன்பாலின ஈர்ப்பு. பெண்ணுக்கு ஆணின் மீதும், பெண்ணின் மீதும் ஈர்ப்பு, திருநங்கையர்களுடனான ஈர்ப்பு என்று சமூகத்தில் எதிர்பாராத பாலுணர்வுகளுடன் வாழ்பவர்கள் பலர் இருப்பதாக அவர்களில் ஒருவரான மோஹனஅரி கூறினார்.

    மனித உறவுகள் எவ்வாறு இருந்தாலும் மக்கள் தங்கள் சொந்த பாலுணர்வை சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும். பல தளங்களிலும் பாலுணர்வாளர்களின் மீதான ஒடுக்குமுறைக்கு தீர்வுகாண வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கை.

    மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சமூக அங்கீகாரத்தை பெறவும் தான் முக்கிய நகரங்களில் ஆண்டுதோறும் இந்த பேரணியை நடத்துவதாகவும், சென்னையில் கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பேரணியை எழுச்சியுடன் நடத்தியதாகவும் கூறினார்கள்.

    ஆயிரக்கணக்கில் திரண்டு இருந்த இந்த மாற்றுப்பாலின உணர்வாளர்கள் வானவில் வண்ணத்தில் கொடிகளை ஏந்தி புதுப்பேட்டை ரோடு வழியாக சென்று மீண்டும் திரும்பி வந்தார்கள்.

    ஆட்டம் பாட்டத்துடன் நடந்த இந்த ஊர்வலத்தை ஏராளமானோர் ரோட்டின் இருபுறமும் நின்று ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேரணியையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

    Next Story
    ×