search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நோய் தொற்று அதிகரிப்பு- கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை
    X

    கொரோனா பரிசோதனை


    நோய் தொற்று அதிகரிப்பு- கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை

    • கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது.
    • சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    போரூர்:

    கோயம்பேடு மார்கெட்டில் சுமார் 4ஆயிரம் கடைகளில் காய்கறி, பழம், பூ மற்றும் மளிகை பொருட்கள் மொத்தமாகவும், சில்லரையிலும் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் மினி வேன்கள் மூலம் காய்கறி, பழம், மளிகை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    தினசரி ஒரு லட்சம் பேர் வரை வந்து செல்லும் கோயம்பேடு மார்கெட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பரவலின் வியாபாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினர் அதேபோல் மார்கெட்டுக்கு பொருட்கள் வாங்க வந்த சில்லரை வியாபாரிகள், மளிகை மற்றும் காய்கறி கடைக்காரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டனர்.

    இதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து வெவ்வேறு இடங்களில் தற்காலிகமாக இயங்கி வந்த சந்தை பின்னர் 5 மாத இடை வெளிக்குப் பிறகு படிப்படியாக திறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கோயம்பேடு மார்கெட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை அங்காடி நிர்வாக குழு தீவிரப்படுத்தியுள்ளது.

    அதன்படி மார்கெட் வளாகத்தில் முககவசம் அணிவது, கடை முன்பு சாணிடைசர் வைப்பது, சமூக இடைவெளி கடை பிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை வியாபாரிகள் கடை பிடிக்க வேண்டும் என்று ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.

    மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தேவையற்ற கூட்ட நெரிசல் ஏற்படுவதையும் தீவிரமாக கண்காணித்து சரி செய்து வருகின்றனர். விதிமுறைகளை மீறும் வியாபாரிகள், கடை ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்கெட்டுக்கு வரும் பொதுமக்களிடம் அபராதம் விதிக்கவும் அங்காடி நிர்வாக குழு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கடந்த வாரம் முதல் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் கடை நடத்தும் வியாபாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள், மார்கெட்டுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 7நாட்களில் இதுவரை 1000 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இதில் 2 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களின் விபரங்களை சுகாதார துறையினர் சேகரித்து வருகின்றனர்.மேலும் மார்க்கெட்டில் உள்ள தொழிலாளர்களின் பட்டியலும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அங்காடி நிர்வாக குழு முதன்மை நிர்வாக அதிகாரி சாந்தி கூறியதாவது:-

    மார்க்கெட்டில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை ஏராளமான வியாபாரிகள் ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர் மேலும் வியாபாரிகள், கடை ஊழியர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அவ்வாறு ஒத்துழைப்பு தராத, விதிமுறைகளை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மண்டல சுகாதார அதிகாரி கோபால கிருஷ்ணன் கூறும்போது:-

    கோயம்பேடு மார்கெட்டில் கடந்த வாரம் முதல் கொரோனா பரிசோதனையை தொடங்கியுள்ளோம் தினசரி 150 முதல் ௨௦௦ பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    பூ மார்க்கெட்டில் இருந்து தொடங்கியுள்ள பரிசோதனை வரும் நாட்களில் பழம், காய்கறி மற்றும் மளிகை மார்க்கெட் என விரிவு படுத்தப்படும் என்றார்.

    Next Story
    ×