search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர்  மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதா?: அண்ணாமலை- மாவட்ட தலைவர் பேசியதாக ஆடியோ வெளியானதால் பரபரப்பு
    X

    அமைச்சர் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதா?: அண்ணாமலை- மாவட்ட தலைவர் பேசியதாக ஆடியோ வெளியானதால் பரபரப்பு

    • மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை-மகா. சுசீந்திரன் பேசியதாக ஆடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • மதுரை விமான நிலையத்துக்கு எத்தனை பேர் இருந்தாலும் அழைத்து வாருங்கள் என்று அண்ணாமலை பேசுவதாக குரல் பதிவாகி உள்ளது.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் கார் மீது, பா.ஜ.க. நிர்வாகிகள் செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர்.

    இந்த நிலையில் மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருந்த சரவணன், திடீரென்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை சந்தித்து பேசினார். அவரை பா.ஜ.க. மேலிடம் பதவி நீக்கம் செய்தது. மதுரை மாநகர் மாவட்ட புதிய பா.ஜ.க. தலைவராக உள்ள மகா சுசீந்திரன் நியமிக்கப்பட்டடார்.

    இந்த நிலையில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை-மகா. சுசீந்திரன் பேசியதாக ஆடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதில் "நான் மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு, மாஸ் ஆக-கிராண்ட் ஆக இருக்க வேண்டும். இந்த விஷயத்தை எப்படி அரசியல் பண்ணுவது? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். நிச்சயமாக அரசியல் பண்ணி விடுவோம். மதுரை விமான நிலையத்துக்கு எத்தனை பேர் இருந்தாலும் அழைத்து வாருங்கள்" என்று அண்ணாமலை பேசுவதாக குரல் பதிவாகி உள்ளது.

    எனவே மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீதான செருப்பு வீச்சு தாக்குதல், திட்டமிட்டு நடத்தப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே சமூக வலைதளத்தில் வெளியான ஆடியோவுக்கு, மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மதுரை மாவட்ட பா.ஜ.க பொதுச்செயலாளர் சந்தோஷ் சுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க திட்டமிட்டு உள்ளனர். அதில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை-மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன் பேசுவது போல யாரோ சிலர் போலியான ஆடியோவை சமூக வலைத் தளங்களில் பரப்பி வருகின்றனர்.

    இந்த விஷயத்தில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி, இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×