search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாலையில் அனாதையாக கிடந்த ரூ. 2 லட்சம் பணத்தை போலீசில் ஒப்படைத்த ஏழைப் பெண்
    X

    ராஜேஸ்வரிக்கு தங்க நாணயம் பரிசு வழங்கிய போது எடுத்த படம்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சாலையில் அனாதையாக கிடந்த ரூ. 2 லட்சம் பணத்தை போலீசில் ஒப்படைத்த ஏழைப் பெண்

    • சாலையில் கேட்பாரற்று அனாதையாக கிடந்த 2 லட்சம் பணத்தை போலீசில் ஒப்படைத்த ஏழை பெண்ணின் நேர்மையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
    • அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படாமல் சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைப்பதற்காக காவல் நிலையத்துக்கு வந்த அந்த பெண்.

    திருச்சி:

    திருச்சியில் சாலையில் கேட்பாரற்று அனாதையாக கிடந்த 2 லட்சம் பணத்தை போலீசில் ஒப்படைத்த ஏழை பெண்ணின் நேர்மையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    திருச்சி தில்லை நகர் தேவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ராஜேஸ்வரி ( வயது 40). கணவர் செல்வராஜ் சமீபத்தில் இறந்துவிட்டார். அதன் பின்னர் வயிற்றுப் பிழைப்புக்காக ராஜேஸ்வரி தில்லை நகர் பகுதியில் உள்ள தள்ளுவண்டி டிபன் கடையில் ரூ. 100 சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தனம் டிபன் கடைக்கு வேலைக்கு சென்ற போது சாலை ஓரத்தில் காகிதப்பை ஒன்று அனாதையாக கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது அதில் கட்டு கட்டாக இரண்டு லட்சம் பணம் இருந்தது.

    உடனே அந்தப் பெண்மணி அவர் வேலை பார்க்கும் டிபன் கடை உரிமையாளர் பிரபாகர் உதவியுடன் தில்லை நகர் போலீஸ் நிலையத்திற்கு அந்த பணத்தை எடுத்துக் கொண்டு விரைந்தார்.

    வறுமை வாடிக் கொண்டிருக்கும் நிலையிலும் அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படாமல் சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைப்பதற்காக காவல் நிலையத்துக்கு வந்த அந்த பெண்மணியின் நேர்மையை கண்டு போலீசார் பாராட்டினர். இது பற்றி உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பணத்தை ஒப்படைத்த ராஜேஸ்வரியை தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து ஒரு கிராம் தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை போலீஸ் கமிஷனர் அன்பு, நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷன் செந்தில் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ரூ. 2 லட்சம் பணத்திற்கு சொந்தம் கொண்டாடியாரும் இதுவரை காவல் நிலையத்துக்கு வரவில்லை. விசாரணை நடந்து வருகிறது.

    இது பற்றி ராஜேஸ்வரி கூறும்போது, பணம் சம்பாதிப்பது சுலபமில்லை. தவறவிட்டவர்கள் என்ன அவசரத்துக்காக எடுத்து வந்தார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். அடுத்தவர் பணத்தை எடுத்துச் சென்று நான் என்ன செய்யப் போகிறேன். உடலில் தெம்பு இருக்கும் வரை உழைத்து சாப்பிடுவேன். அந்தப் பணம் உரியவரிடம் சென்றால் அதுவே மகிழ்ச்சி என்றார்.

    Next Story
    ×