search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சொந்த ஊர் சென்றவர்கள் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப 3,790 பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது
    X

    சொந்த ஊர் சென்றவர்கள் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப 3,790 பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது

    • தீபாவளியை நேற்று இரவு முடித்துவிட்டு இன்று பணிக்கு திரும்பக்கூடியவர்கள் பயணத்தை உடனடியாக மேற்கொண்டனர்.
    • இன்று அரசு அலுவலகங்கள், வங்கிகள் செயல்படுவதால் நேற்று இரவே பயணம் செய்தனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து பயணம் செய்துள்ளனர். கடந்த வாரம் 20-ந்தேதி முதல் வெளியூர் பயணத்தை தொடங்கினார்கள்.

    சிறப்பு பஸ்கள் மூலம் 6 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். ஆம்னி பஸ்கள் வழியாக 1½ லட்சம் பேர் சொந்த ஊர் சென்றனர். இதுதவிர ரெயில்கள் மூலம் 12 லட்சம் பேர் சென்றதாக தகவல் தெரிவிக்கின்றன.

    மேலும் கார், வேன், விமானம் மூலம் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயணமாகி உள்ளனர். கடந்த 2 வருடமாக முடங்கி கிடந்த மக்கள் இந்த ஆண்டு சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் சென்றனர். சிறப்பு ரெயில், பஸ் போன்றவற்றில் சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தீபாவளியை நேற்று இரவு முடித்துவிட்டு இன்று பணிக்கு திரும்பக்கூடியவர்கள் பயணத்தை உடனடியாக மேற்கொண்டனர். இன்று அரசு அலுவலகங்கள், வங்கிகள் செயல்படுவதால் நேற்று இரவே பயணம் செய்தனர்.

    இதனால் சிறப்பு ரெயில், பஸ்கள் மூலம் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், கோயம்பேடு பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதற்கிடையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நாளை திறக்கப்படுவதால் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புவோரின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது.

    பகல்நேரம் மற்றும் இரவு நேர பயணத்தை மேற்கொண்டு பணிகளை தொடர திட்டமிட்டு பெரும்பாலானவர்கள் இன்று பயணம் செய்கிறார்கள். அதன் அடிப்படையில் வெளியூர் சென்ற மக்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.

    இன்று சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் 1,678 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 3,778 பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாளை (26-ந்தேதி) 2,954 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் சென்னைக்கு விடப்பட்டுள்ளது.

    இன்று பயணம் செய்வதற்காக 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். கூலி வேலை, தனியார் கம்பெனிகளில் வேலை செய்யக்கூடியவர்கள் தங்களது பணியை இன்று முதல் தொடர்கின்றனர். அதனால் பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழியும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரெயில்களும் விடப்பட்டு இருப்பதால் லட்சக்கணக்கான மக்கள் இன்றும் நாளையும் சென்னை திரும்புவார்கள் என்ற அடிப்படையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தாம்பரம், பெருங்களத்தூர், கோயம்பேடு பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் போலீசார் இணைந்து செயல்படுகின்றனர். ஆம்னி பஸ்களிலும் இடங்கள் நிரம்பி உள்ளன.

    சென்னை தவிர பிற நகரங்களும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 3,790 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய முன்பதிவும் நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×