search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாத்தான்குளம் வழக்கு: போலீஸ் நிலையத்தில் முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள்
    X

    சாத்தான்குளம் மகன்- தந்தை

    சாத்தான்குளம் வழக்கு: போலீஸ் நிலையத்தில் முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள்

    • சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு 5 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென்று வந்தனர்.
    • ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை கொடூரமாக தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட மர மேஜையையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றி வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ். கடந்த 2019-ம் ஆண்டு ஊரடக்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி சாத்தான்குளம் போலீசார், 2 பேரையும் போலீஸ் நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கினர்.

    இதில் பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி, அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு 5 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று திடீரென்று வந்தனர். அங்கு சீல் வைக்கப்பட்டு இருந்த அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் அறையின் சீலை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு இருந்த வழக்கு சம்பந்தமான சில முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

    மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை கொடூரமாக தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட மர மேஜையையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றி வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.

    சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை மீண்டும் கைப்பற்றி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    Next Story
    ×