search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கியதில் ரூ.4 கோடி அரசுக்கு தேவையற்ற செலவு- தணிக்கைத்துறை குற்றச்சாட்டு
    X

    பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கியதில் ரூ.4 கோடி அரசுக்கு தேவையற்ற செலவு- தணிக்கைத்துறை குற்றச்சாட்டு

    • 13 அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் முதல் மூன்று நாட்கள் வரை இலவச சீருடை அணிந்தனர்.
    • மீதமுள்ள மூன்று மாவட்டங்களில் உள்ள 148 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 24 பள்ளிகளில் அரசு வழங்கிய சீருடைகள் பயன்படுத்தப்படவில்லை.

    சென்னை:

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 4 சீருடைகள் இலவசமாக தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த சீருடைகள் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சத்துணவு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    2021-22-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்த மாணவர் எண்ணிக்கை 47.89 லட்சம். அவர்களில் 38.41 லட்சம் பேர் மதிய உணவு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    2021 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 4 மாவட்டங்களில் உள்ள 1,425 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 214 மாதிரி பள்ளிகளில் சீருடை பயன்பாடு குறித்த தணிக்கை ஆய்வு நடத்தப்பட்டது

    இதில் சென்னை மாவட்டத்தில் உள்ள 66 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 48 பள்ளிகளில் பள்ளிகளின் நிர்வாகங்கள் வெவ்வேறு வண்ணம் மற்றும் வடிவமைப்பு கொண்ட சீருடையை அமல்படுத்தி உள்ளதால் அரசு வழங்கிய இலவச சீருடை அணியவில்லை.

    13 அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் முதல் மூன்று நாட்கள் வரை இலவச சீருடை அணிந்தனர். மீதமுள்ள நாட்களில் அவர்கள் பள்ளி நிர்ணயித்த சீருடையை அணிவது தெரியவந்துள்ளது.

    மீதமுள்ள மூன்று மாவட்டங்களில் உள்ள 148 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 24 பள்ளிகளில் அரசு வழங்கிய சீருடைகள் பயன்படுத்தப்படவில்லை. மேலும் 36 பள்ளிகளில் மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் முதல் மூன்று நாட்கள் வரை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

    இரண்டு வெவ்வேறு சீருடைகளை அணிவது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    பள்ளிகளில் இருந்து குறிப்பிட்ட கோரிக்கைகள் பெறாமல் தேவையின்றி இலவச சீருடைகள் வழங்குவதாக தணிக்கை துறை குற்றம் கண்டறிந்து உள்ளது.

    அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தில் பதிவு செய்துள்ள மாணவர்களுக்கு அவர்களது தேவையை அறிந்து கொள்ளாமல் சீருடை வழங்கியதில் 4 கோடியே 13 லட்சம் ரூபாய் அளவுக்கு தேவையற்ற செலவினம் ஏற்பட்டதாகவும், மேலும் சீருடை ஓரளவு மட்டுமே பயன்படுத்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சீருடைகளால் 2 கோடியே 25 லட்சம் அளவுக்கு தேவையற்ற செலவு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை துறை கண்டறிந்துள்ளது .

    எனவே அரசு திட்ட வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்யலாம், சீருடை கேட்டு கோரிக்கைகள் வழங்கும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இலவச சீருடை வழங்கலாம். வாரத்திற்கு ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை இலவச சீருடை அணியும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் சீருடைகள் எண்ணிக்கையை குறைக்கலாம் என தணிக்கை துறை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

    Next Story
    ×