search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் ஓ.பி.எஸ்.- அ.தி.மு.க.வை கைப்பற்ற அதிரடி திட்டம்
    X

    ஓ பன்னீர்செல்வம்

    சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் ஓ.பி.எஸ்.- அ.தி.மு.க.வை கைப்பற்ற அதிரடி திட்டம்

    • எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வில் உள்ள ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை நீக்கி விட்டு புதிய பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார்.
    • சுற்றுப்பயணத்தை தனது சொந்த ஊரான தேனியில் இருந்தே தொடங்குவதற்கு ஓ.பி.எஸ். முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வத்தை அந்த பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் அதிரடியாக நீக்கி விட்டு எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராகி இருக்கிறார்.

    கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திலும் ஓ.பன்னீர்செல்வம் மனு செய்துள்ளார். அதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக நான் நீடிக்கிறேன். எனது ஒப்புதலின்றி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

    கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியை நான் நீக்கி இருக்கிறேன். அவருக்கு பதில் வைத்தியலிங்கம் புதிய இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்கிற தகவலையும் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் தெரிவித்து உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வில் உள்ள ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை நீக்கி விட்டு புதிய பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை நீக்கி விட்டு அந்த இடத்துக்கு புதிய பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார்.

    மேலும் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியால் ஓரம் கட்டப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள பழைய முன்னணி நிர்வாகிகளையும் ஓ.பன்னீர்செல்வம் தன்பக்கம் இழுத்து வருகிறார். அந்த வகையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கும் ஓ.பி.எஸ். குறி வைத்துள்ளார்.

    எடப்பாடி பழனிசாமியால் நீண்ட நாட்கள் கட்சியை வழி நடத்தி செல்ல முடியாது என்றும், பாராளுமன்ற தேர்தலுக்குள் கட்சியில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிச்சயம் அரங்கேறும் என்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். இதுபோன்ற கருத்துக்களை கூறியே அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பலரையும் வளைத்துப்போட ஓ.பன்னீர்செல்வம் காய் நகர்த்தி வருகிறார். தமிழகம் முழுவதும் இது போன்று ஆதரவு திரட்டும் முயற்சியில் ஓ.பி.எஸ். தீவிரம் காட்டி வருகிறார்.

    இதற்காக விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஓ.பி.எஸ். தயாராகி வருகிறார். அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்வது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் அதில் முடிவு எப்படி வந்தாலும் கவலைப்படாமல் சுற்றுப்பயண திட்டத்தை வகுத்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

    இந்த சுற்றுப்பயணத்தை தனது சொந்த ஊரான தேனியில் இருந்தே தொடங்குவதற்கு ஓ.பி.எஸ். முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்கு ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று தேவர் அமைப்புகள் வலியுறுத்தி உள்ள நிலையில் அது தொடர்பாகவும் ஓ.பி.எஸ். தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டுவதற்கு சசிகலாவுடன் கைகோர்ப்பதில் தவறு இல்லை என்றே ஆதரவாளர்களும் ஓ.பன்னீர்செல்வத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    அப்படி ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே அ.தி.மு.க.வை கைப்பற்ற முடியும் என்றும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையெல்லாம் மனதில் வைத்தே ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணத்துக்கு தயாராகி வருகிறார்.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருப்பவர்களையெல்லாம் ஒருங்கிணைத்தால் மட்டுமே தலைமை பதவியை கைப்பற்ற முடியும் என்கிற கருத்தையும் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஆதரவாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

    இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள எடப்பாடி பழனிசாமியின் அதிருப்தியாளர்களை ஒருங்கிணைக்கும் பணியையும் ஓ.பி.எஸ். முடுக்கி விட்டுள்ளார். இதன்மூலம் ஓ.பி.எஸ். விரைவில் எடப்பாடிக்கு எதிராக அதிரடி அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×