search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்திலேயே அதிகம்- நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 1,752 மி.மீ. மழைப்பொழிவு
    X

    தமிழகத்திலேயே அதிகம்- நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 1,752 மி.மீ. மழைப்பொழிவு

    • மேட்டூர் அணை இந்த ஆண்டு முன்கூட்டியே திறக்கப்பட்ட நிலையில் குறுவை சாகுபடி அறுவடை பருவத்தை எட்டி உள்ளது.
    • செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் சராசரி மழை அளவைக் காட்டிலும் குறைவாகவே மழை பெய்துள்ளது.

    கோவை:

    தமிழ்நாட்டில் 2022-ம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட சராசரியாக 90 சதவீதம் அதிக அளவில் பெய்திருப்பதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து துணைவேந்தர் கீதாலட்சுமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட சராசரியாக 90 சதவீதம் அதிகமாக பெய்து உள்ளது. இந்த பருவ மழைக்காலம் இன்னும் 3 வாரங்களுக்குத் தொடரும் என்பதால் மழை அளவு மேலும் அதிகரிக்கும். பல மாவட்டங்களில் சராசரி மழையை விட கூடுதலாக 150 சதவீதத்துக்கும் மேலாக மழை பதிவாகி உள்ளது.

    தமிழகத்திலேயே அதிகப்படியாக நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 1,752 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இந்த பருவத்தில் நீலகிரியின் சராசரி மழை அளவு 701 மி.மீ. என்ற நிலையில், சுமார் 150 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகி உள்ளது. தூத்துக்குடியின் சராசரி மழை அளவு 37 மி.மீ. என்ற நிலையில் 110 மி.மீ. மழையும், திருப்பூரின் மழை அளவு 89 மி.மீ. என்ற நிலையில் 261 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது. இது 190 சதவீதத்துக்கும் அதிகமாகும்.

    செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் சராசரி மழை அளவைக் காட்டிலும் குறைவாகவே மழை பெய்துள்ளது. இவற்றில் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் இயல்பை விட 27 சதவீதம் குறைவாக மழை பதிவாகி உள்ளது.

    மேட்டூர் அணை இந்த ஆண்டு முன்கூட்டியே திறக்கப்பட்ட நிலையில் குறுவை சாகுபடி அறுவடை பருவத்தை எட்டி உள்ளது. தற்போதைய மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. பயிர் மஞ்சள் நிறத்துக்கு வந்ததும் அறுவடை செய்யும் எண்ணத்தில் இருக்கும் விவசாயிகள், நெல் மணிகள் முற்றிவிட்டதா என்று பார்த்துவிட்டு அறுவடையை உடனடியாகத்தொடங்க வேண்டும்.

    சம்பா, தாளடி நாற்றங்கால்களை விவசாயிகள் தயாராக வைத்திருக்க வேண்டும். நெல் வயல்களில் நீர் தேங்காமல் இருப்பதற்கான பணிகளை விவசாயிகள் கவனித்தால் பயிர் சேதத்தில் இருந்து தப்பிக்க முடியும். அதேபோல கரும்புப் பயிரை சோகை உரித்தும், வாழைக்கு முட்டுக்கொடுத்தும் காப்பாற்றவேண்டும். காய்கறி பயிர்களுக்கு வடிகால் வசதியை ஏற்படுத்துவதுடன், மழை முடிந்த பிறகு உர மிடவேண்டும்.

    இந்த பருவத்தில் நல்ல மழை பெய்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீரின் தரமும் உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதிலும் சுமார் 240 இடங்களில் தானியங்கி கருவிகள் வைக்கப்பட்டு மழை நிலவரத்தை பல்கலைக்கழகம் கணித்து வருகிறது.

    மேலும், 45 இடங்களில் கருவிகளைப் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 80 சதவீத சரியான கணிப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த 3 வாரங்களுக்கு மழை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×