search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இரட்டை குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை
    X

    இரட்டை குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை

    • குறை பிரசவத்தில் பிறந்த 2 குழந்தைகளும் குறைவான எடையுடன் ஆரோக்கியம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
    • 2 பச்சிளம் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள பாலபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சபரி. பஞ்சு மில் தொழிலாளி. இவரது மனைவி சரளா (வயது 28). இவர்களுக்கு 7 வயதில் சர்வேஷ் என்ற மகன் உள்ளார்.

    இந்த நிலையில் சரளா மீண்டும் கர்ப்பம் ஆனார். கடந்த மாதம் பேறுகாலத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்தார். சரளாவிற்கு பேறு காலத்திற்கு முன்னதாகவே இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது.

    குறை பிரசவத்தில் பிறந்த 2 குழந்தைகளும் குறைவான எடையுடன் ஆரோக்கியம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சரளா தனது குடும்ப உறவினர்களிடம் குழந்தைகளின் நிலையை பார்க்கும்போது இறந்து விடலாம் போல் உள்ளதாக வேதனையுடன் கூறிவந்துள்ளார்.

    சரளாவின் கணவர் சபரி நேற்று இரவு தனது மாமனார் வீட்டுக்கு வந்தார். அவரிடம் சரளா இதுபற்றி கூறி புலம்பியுள்ளார். சபரி மனைவி சரளாவுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இன்று அதிகாலை சரளா தனது குழந்தைகளுடன் படுக்கையில் இல்லாததை அறிந்த அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது சரளா அருகில் உள்ள வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் மிதந்து கொண்டிருப்பதை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சரளாவை மீட்டனர். பின்னர் அவரை உடனடியாக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது சரளா பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.

    இதனால் அவரது பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்து அங்கு வந்த அவரது கணவரும் அழுது புரண்டது காண்போர் கண்களை குளமாக்கியது. சரளாவின் இரட்டை குழந்தைகளை கிணற்றுப் பகுதியில் தேடினர்.

    இதுபற்றி எடப்பாடி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சரளாவின் குழந்தைகளை தேடி வருகின்றனர். 2 பச்சிளம் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×