search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மின்சார வாரியத்தின் நிதிநிலை மோசமாக இருப்பதற்கு அ.தி.மு.க.வே காரணம்- அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு
    X

    மின்சார வாரியத்தின் நிதிநிலை மோசமாக இருப்பதற்கு அ.தி.மு.க.வே காரணம்- அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    • மின்சார வாரியத்திற்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் சுமை உயர்ந்தது.
    • தமிழகத்தில் 20 ஆண்டுகளாக 4 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்திருந்தனர்.

    கோவை:

    மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மின்சார வாரிய நிதிநிலை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியினால் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக சீர்கேடே இதற்கு காரணம். இதன் காரணமாக மின்சார வாரியத்திற்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் சுமை உயர்ந்தது.

    ஆண்டுக்கு 16 ஆயிரத்து 500 கோடி வட்டி செலுத்தும் நிலைமைக்கு தமிழக மின்சார வாரியம் தள்ளப்பட்டது. அப்போது மொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் மின்சார வாரியம் உற்பத்தி செய்தது.

    மீதி 2 பங்கு மின்சாரத்தை வெளியில் தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கி விட்டு தமிழகம் மின்மிகை மாநிலம் என்று கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தவறான பிரசாரம் மக்கள் மத்தியில் வைக்கப்பட்டது.

    தமிழகத்தில் 20 ஆண்டுகளாக 4 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்திருந்தனர். தமிழகம் மின்மிகை மாநிலம் என்றால் பதிவு செய்திருந்த அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பை வழங்கி இருக்கலாம். ஆனால் அப்படி கொடுக்கவில்லை. கிடப்பில் போடப்பட்டது.

    இந்த நிலையில் நாளை மற்றும் மறுநாள் சில அரசியல் கட்சியினர் மின்சார கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா?.

    மேலும் மின் கட்டண உயர்வால் ஏழை, எளிய மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடன் கொடுக்க கூடாது என ரிசர்வ் வங்கிக்கே மத்திய அரசு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கி உள்ளோம். அடுத்த கட்டமாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது.

    தற்போது மின் கட்டணம் மாற்றத்தின் மூலமாக 2 கோடியே 28 லட்சம் பேருக்கு நிலை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் வகையில் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. டிரான்ஸ்பார்மரில் மீட்டர் பொருத்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு டெண்டர் வரை சென்று உள்ளது.

    எனவே மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் முறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×