search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    துப்பாக்கி வைத்திருப்பதை உரிமையாக கோர முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
    X

    துப்பாக்கி வைத்திருப்பதை உரிமையாக கோர முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

    • மனுதாரர் வன விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும், தன்னிடம் உள்ள பொருட்களை பாதுகாக்கும் நோக்கத்திலும் துப்பாக்கிக்கான உரிமம் கோரியுள்ளார்.
    • பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் கொண்டு செல்லும்போது பாதுகாப்பு கருதியும் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரியுள்ளார்.

    மதுரை:

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மனோகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    எனது விவசாய நிலம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. விவசாய பணிகளுக்காக செல்லும்போது வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் விவசாய பணிக்கு பணம் எடுத்துச் செல்லும்போது பாதுகாப்பு காரணங்களுக்காக துப்பாக்கி தேவை வைத்துக் கொள்வது அவசியமாகிறது. எனவே துப்பாக்கிக்கு உரிமம் கேட்டு வருவாய் அதிகாரியிடம் விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து சொந்த பாதுகாப்பு காரணங்களுக்காக நான் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    மனுதாரர் கடந்த 2006-ம் ஆண்டு துப்பாக்கி வைக்க உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல எக்டேர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகிறார். அப்பகுதியில் அச்சுறுத்தும் விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாகவும், தேசிய நெடுஞ்சாலை துறையின் ஒப்பந்ததாரராகவும், பஞ்சாயத்து யூனியன் கட்டுமான பணிகளை மேற்கொள்பவராக இருப்பதால், பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் கொண்டு செல்லும்போது பாதுகாப்பு கருதியும் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரியுள்ளார்.

    மனுதாரரின் தந்தை 90 வயது நிரம்பியவர். 50 ஆண்டுகளாக துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் பெற்றிருக்கிறார். இதுவரை அவர் அதனை தவறாக பயன்படுத்தியதில்லை.

    இந்த நிலையில், நெல்லை மாவட்டம் சமூக பிரச்சினைகள் அதிகம் உள்ள மாவட்டமாக இருப்பதாலும், பொது அமைதி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் மனுதாரருக்கு துப்பாக்கி உரிமம் வழங்க இயலாது எனக்கூறி நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் அவரது மனுவை நிராகரித்துள்ளார்.

    மனுதாரர் வன விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும், தன்னிடம் உள்ள பொருட்களை பாதுகாக்கும் நோக்கத்திலும் துப்பாக்கிக்கான உரிமம் கோரியுள்ளார். பாதுகாப்பிற்காக துப்பாக்கியை வைத்துக் கொண்டுதான் இருக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இல்லை. துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமத்தை உரிமையாக கோர முடியாது. அதற்கான அவசியத்தை முன் வைக்கலாம். எனவே மனுதாரர் கோரிய நிவாரணத்தை வழங்க இயலாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    Next Story
    ×