search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கட்சியிலும்... சட்ட நடவடிக்கைகளிலும் பின்னடைவு- ஓ.பன்னீர்செல்வத்துக்கு சோதனை மேல் சோதனை
    X

    கட்சியிலும்... சட்ட நடவடிக்கைகளிலும் பின்னடைவு- ஓ.பன்னீர்செல்வத்துக்கு சோதனை மேல் சோதனை

    • கட்சிக்குள் தொடர்ந்து எதிர்ப்பை சந்தித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் சட்டரீதியாக எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்றே நினைத்திருந்தார்.
    • ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து ஓரம் கட்டிய எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் போஸ்டர்கள், பேனர்களிலும் அவரை புறக்கணித்தனர்.

    கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தனித்தனியாக அணி திரண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு கூட்டத்துக்கான அறிவிப்பை வெளியிட்டு விட்டு அதனை நடத்துவதற்கு தீவிரமாக செயல்பட்டனர்.

    அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பொதுக்குழுவை நடத்துவதற்கு தடை கேட்டு கோர்ட்டு படியேறினர். எப்படியாவது சட்டத்தின் மூலமாக தடை வாங்கி விட வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் தீவிரமாக செயலாற்றினார்.

    பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கமே இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியினர் ஆதரவு இல்லாத நிலையில் தவித்து வந்தார்.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு பொதுக்குழு கூட்டத்துக்கு தடை இல்லை என்று உத்தரவிட்டுள்ளது ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடும் பின்னடைவாகவே அமைந்துள்ளது.

    கடந்த 2 வாரத்துக்கு முன்னர் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்தான் முதல் முதலாக ஒற்றை தலைமை கோஷம் ஒலித்தது. பொதுக்குழு உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி தலைமை பதவியை பிடிக்க திட்டமிட்டிருப்பதை அறிந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்து பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் ஆவேசம் பொங்க பல்வேறு கருத்துக்களை கூறினார்.

    இரட்டை தலைமை தற்போது நன்றாகவே சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஒற்றை தலைமைக்கு அவசியம் ஏற்பட்டது ஏன்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கண்டு கொள்ளவே இல்லை.

    இதன் பின்னர் அவர்கள் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கைகளும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சோதனை மேல் சோதனையாக அமைந்திருந்தன. குறிப்பாக 23-ந்தேதி நடந்த பொதுக்குழுவில் தனக்கு எதிராக இவ்வளவு களேபரம் நடந்தேறும் என்று ஓ.பன்னீர்செல்வம் எதிர்பார்த்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு அவருக்கு எதிர்ப்பலைகள் எழுந்தன.

    இதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து ஓரம் கட்டிய எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் போஸ்டர்கள், பேனர்களிலும் அவரை புறக்கணித்தனர். அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பேனர்கள் கிழித்தும் எறியப்பட்டன.

    இப்படி கட்சிக்குள் தொடர்ந்து எதிர்ப்பை சந்தித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் சட்டரீதியாக எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்றே நினைத்திருந்தார். ஆனால் கடைசியில் அதுவும் பலிக்காமலேயே போய் விட்டது.

    இதன் மூலம் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் கை 100 சதவீதம் ஓங்கி இருப்பது உறுதியாகி உள்ளது. திட்டமிட்டபடி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    Next Story
    ×