search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குற்றாலம் அருவி
    X
    குற்றாலம் அருவி

    மணிமுத்தாறு அருவியில் குளிக்க மீண்டும் அனுமதி- குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

    தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    தென்காசி:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்த சாரல் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 50 அடிக்கும் கீழாக இருந்த நிலையில் தொடர்மழையால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று அந்த அணையின் நீர்மட்டம் 62.75 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1370.74 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 353.50 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 79.40 அடியாகவும், 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 83.60 அடியாகவும் உள்ளது.

    கடந்த சில நாட்களாக அம்பை வனக்கோட்ட பகுதியில் பெய்த மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    தற்போது அருவியில் வெள்ளம் குறைந்துள்ளதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இன்று விடுமுறை என்பதால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.

    இதே போல் காரையாறு அகஸ்தியர் அருவியிலும் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை பகுதியில் 2 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. இன்று மாவட்டத்தில் மழை வெகுவாக குறைந்தது.

    தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு படையெடுத்தனர். மெயினருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் அங்கு வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளும் காத்திருந்து அருவிகளில் குளித்து சென்றனர்.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய கடையநல்லூர், ஆய்க்குடி, செங்கோட்டை, தென்காசி ஆகிய இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை கடனாநதி அணையின் நீர்மட்டம் 39 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 47 அடியாகவும் உள்ளது. இந்த 2 அணைகளிலும் நீர்மட்டம் தலா ஒரு அடி உயர்ந்து உள்ளது. மிக சிறிய அணையான 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணையின் நீர்மட்டம் 18 அடியாக உள்ளது.

    அடவிநயினார் அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 52 அடியாக உள்ளது. அந்த அணை பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    Next Story
    ×