search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் பிளாட்பாரத்திற்கு காங்கிரீட் போடப்படுவதை காணலாம்
    X
    கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் பிளாட்பாரத்திற்கு காங்கிரீட் போடப்படுவதை காணலாம்

    கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரம்

    கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே ஒரு இரட்டை ரெயில் பாதையும் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே மற்றொரு இரட்டை ரெயில் பாதையும் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    கன்னியாகுமரி:

    சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள ரெயில் பாதை தமிழகத்தின் மிக முக்கிய ரெயில் வழித்தடம் ஆகும்.

    இந்த வழித்தடம் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 11 மாவட்டங்கள் வழியாக கன்னியாகுமரியை வந்தடைகிறது. இந்த பாதையை மையமாக வைத்தே மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் பாதைகள் பிரிந்து செல்கின்றன.

    தென் மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் இந்த தடத்தில் அதிக ரெயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இந்த வழித்தடம் ஒரு வழி பாதையாக இருப்பதால் ஒரு புதிய ரெயிலை கூட இயக்க முடியாத நிலை இருந்து வருகிறது. தென் மாவட்ட மக்கள் பல ஆண்டுகளாகவே கன்னியாகுமரியில் இருந்து மதுரை வரை உள்ள பாதையை இருவழி பாதையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

    தென் மாவட்ட பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரெயில்வே நிர்வாகம் கன்னியாகுமரியில் இருந்து மதுரை வரையிலான 245 கிலோ மீட்டர் தூரம் உள்ள வழித்தடங்களை இருவழிப்பாதையாக மாற்றுவதற்கு கடந்த 2012-13 ம் ஆண்டு அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மதுரை இருவழிபாதை அமைக்க பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த அடிப்படையில் கடந்த 2015-16ம் ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் கன்னியாகுமரி மதுரை வழித்தடம் இருவழி பாதையாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மதுரை - மணியாச்சி - தூத்துக்குடி 159 கிலோ மீட்டர் தூரம் ரூ.1,182 35 கோடியில் ஒரு திட்டமாகவும் மணியாச்சி - திருநெல்வேலி - நாகர்கோவில் 102 கிலோ மீட்டர் தூரம் 1,003 - 94 கோடியில் ஒருதிட்டமாகவும் கன்னியாகுமரி திருவனந்தபுரம் 87 கிலோ மீட்டர் தூரம் 1,453-90 கோடியில் ஒரு திட்டமாகவும்3கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதில் தற்போது கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே ஒரு இரட்டை ரெயில் பாதையும் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே மற்றொரு இரட்டை ரெயில் பாதையும் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக கன்னியாகுமரி - நாகர்கோவில் இடையேயும் நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையேயும் நாகர்கோவில் - நெல்லை இடையேயும் ஏற்கனவே உள்ள ரெயில் பாதை அருகே உள்ள இடத்தில் மண் கொட்டப்பட்டு நிரப்பப்பட்டு புதிய பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த பணி 50 சதவீதத்துக்கு மேல் நிறைவடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள ரெயில் நிலையத்தில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ரெயில் நிலையத்தில் இரட்டை ரெயில் பாதைக்காக மண் கொட்டப்பட்டு ரோடு ரோலர் என்ஜின் மூலம் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    மறுபுறம் கூடுதல் பிளாட்பாரங்கள் அமைக்கும் பணியும் அந்த பகுதியில் மேற்கூரை மற்றும் நிழற்குடை அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. கன்னியாகுமரியில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு இருவழி பாதை பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டால் தற்போது இந்த தடம் வழியாக இயக்கப்பட்டு வரும் அனைத்து ரெயில்களுக்கும் பயண நேரம் கணிசமான அளவு குறையும். கன்னியாகுமரியில் இருந்து சென்னை வழியாக வட இந்திய நகரங்களுக்கு புதிய ரெயில்கள் இயக்கப்படும். மேலும் கன்னியாகுமரி முதல் மதுரை வரை உள்ள பாதை இருவழிப்பாதையாக மாற்றப்பட்டால் கன்னியாகுமரியில் இருந்து தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு 10 மணி நேரத்தில் பயணிக்கலாம்.


    Next Story
    ×