search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீட்பு பணிகளுக்கு இடையே இன்றும் பாறைகள் சரிந்து விழுந்த காட்சி.
    X
    மீட்பு பணிகளுக்கு இடையே இன்றும் பாறைகள் சரிந்து விழுந்த காட்சி.

    நெல்லை கல்குவாரி விபத்து- மீட்பு பணிகள் நிறுத்தம்

    கல்குவாரியில் நடந்த விபத்து தொடர்பாக குவாரி உரிமையாளர் சங்கர நாராயணன், ஒப்பந்த தாரர்கள் செல்வராஜ், குமார் மற்றும் மேலாளர் ஜெபஸ்டின் ஆகிய 4 பேர் மீதும் 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான் குளத்தில் தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த குவாரியில் நேற்று முன்தினம் இரவு 400 அடி ஆழத்தில் கற்களை ஏற்றிக்கொண்டிருந்தபோது ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த 6 தொழிலாளர்கள் பாறைகளின் இடிபாடுகளில் சிக்கினர்.

    மேலும் அங்கு நின்ற லாரி மற்றும் பொக்லைன் எந்திரங்களும் இடிபாடுகளில் சிக்கியது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று கயிறு மூலம் குவாரிக்குள் இயங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் (வயது 40), நாட்டார்குளத்தை சேர்ந்த விஜய் (27) ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

    தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் சுமார் 17 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இளையநயினார் குளத்தை சேர்ந்த செல்வம் என்பவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே பாறை சரிவில் சிக்கிய காக்கைகுளத்தை சேர்ந்த செல்வகுமார் (30), தச்சநல்லூர் ஊருடையான்குளத்தை சேர்ந்த ராஜேந்திரன், ஆயன்குளத்தை சேர்ந்த மற்றொரு முருகன் (23) ஆகிய மேலும் 3 பேர் கதி என்ன? என்று தெரியவில்லை.

    சுமார் 400 அடி ஆழத்தில் சிக்கி இருப்பதால் அவர்களை மீட்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 30 பேர் வரவழைக்கப்பட்டனர். நேற்று நள்ளிரவு சம்பவ இடத்திற்கு வந்தடைந்த அந்த குழு குவாரியை முழுமையாக ஆய்வு செய்தது.

    தொடர்ந்து இரும்பு கயிறு மூலமாக எவ்வாறு பாறை சரிவில் சிக்கியவர்களை மீட்கலாம் என்பது குறித்து தொழில்நுட்ப வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்தனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில் சுமார் 50 ஆயிரம் டன் எடை கொண்ட பாறாங்கற்கள் இதில் சரிந்து உள்ளது. அதில் இருந்து 3 பேரையும் மீட்பது என்பது சிரமமான ஒன்றுதான். எனினும் 3 பேரையும் உயிருடன் மீட்க போராடுவோம். எங்களால் முடிந்தவரை அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று கூறினர்.

    இதையடுத்து இன்று அதிகாலை முதலே பேரிடர் மீட்பு குழுவினர் 30 பேர் 2 குழுக்களாக பிரிந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    2வது நாளாக நடைபெறும் இந்த மீட்பு பணியில் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினரும் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் பலனாக இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 தொழிலாளர்களில் ஒருவரை மட்டும் காண முடிந்தது. ஆனால் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த அவரையும் மீட்க முடியாமல் இருந்தது.

    இந்நிலையில் இன்றும் மீட்பு பணிகள் நடைபெற்ற போதே 2 முறை பாறைகள் சரிந்து விழுந்தது. இதனால் குவாரியில் சுமார் 400 அடி ஆழத்தில் சிக்கி உள்ள 3 தொழிலாளர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு வசதிகளுடன் மீட்பு பணியை தொடர்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுவரை 3 தொழிலாளர்களும் மீட்கப்படாததால் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே கல்குவாரியில் நடந்த விபத்து தொடர்பாக குவாரி உரிமையாளர் சங்கர நாராயணன், ஒப்பந்த தாரர்கள் செல்வராஜ், குமார் மற்றும் மேலாளர் ஜெபஸ்டின் ஆகிய 4 பேர் மீதும் 3 பிரிவுகளில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் சங்கர நாராயணன், ஜெபஸ்டின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் பாறைகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால் அவை இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

    மண்ணியல் நிபுணர்கள் ஆய்வு செய்து, மீட்பு பணிகளை தொடங்கலாம் என அறிவுறுத்திய பிறகே மீண்டும் மீட்பு பணிகள் தொடங்கும் என்று மீட்பு பணிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


    Next Story
    ×