search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சஸ்பெண்டு
    X
    சஸ்பெண்டு

    லஞ்சம் கொடுத்த வாலிபர் விஷம் குடித்து உயிரிழப்பு- வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் சஸ்பெண்ட்

    வீடு கட்டுவதற்காக லஞ்சம் கொடுத்த வாலிபர் மனவேதனையில் விஷம் குடித்து உயிரிழந்ததையடுத்து, லஞ்சம் வாங்கிய மகேஸ்வரனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
    பேரளம்:

    திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள வேலங்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட கமுதக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 25).

    தனது குடும்பத்தினருடன் கூரை வீட்டில் வசித்து வந்த இவர், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அனுமதி கிடைத்த உடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடு கட்டும் பணிகளை தொடங்கினார்.

    அப்போது நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஓவர்சியர் மகேஸ்வரன் என்பவர் வீடு கட்டும் திட்ட பணிகளுக்காக ரூ.3 ஆயிரத்தை மணிகண்டனிடம் இருந்து லஞ்சமாக வாங்கி உள்ளார். வீட்டின் மேற்கூரை கான்கிரீட் போட்டவுடன் சிறிதளவு தொகை மணிகண்டனின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. இந்த தொகையில் இருந்தும் ரூ.15 ஆயிரத்தை லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வீடு கட்டுவதற்கு மேலும் பணம் தேவைப்பட்டதால் தான் வெளிநாடு செல்வதற்காக கடன் வாங்கி வைத்திருந்த பணத்தை கொண்டு மணிகண்டன் வீடு கட்டும் பணிகளுக்கு செலவு செய்துள்ளார்.

    இதனிடையே திட்ட பணிகளுக்கான மேலும் தொகை சில நாட்களில் வந்து விடும் என மணிகண்டனிடம், வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் மகேஸ்வரன் கூறி உள்ளார். ஆனால் அவர் கூறியபடி பணம் வரவில்லை.

    லஞ்சம் கொடுத்ததாலும், கடன் வாங்கியதாலும் மனமுடைந்த மணிகண்டன் நேற்று மாலை விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை மணிகண்டன் இறந்தார்.

    முன்னதாக விஷம் குடிக்கும் முன் தான் லஞ்சம் கொடுத்த விவரத்தை பேசி அதை மணிகண்டன் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் லஞ்சம் வாங்கிய மகேஸ்வரனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் உத்தரவிட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×