search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரத்து 531 கன அடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    மேட்டூர்:

    தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் 5 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மீண்டும் அதிகரித்து 6 ஆயிரத்து 500 கன அடியானது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் பரிசல்ககளிலும் உற்சாகமாக சென்று இயற்கை அழகை கண்டு களித்தனர். ஒகேனக்கலுக்கு வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 4 ஆயிரத்து 425 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து விநாடிக்கு 5 ஆயிரத்து 531 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    நேற்று 106.15 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 106.38 அடியானது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தால் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×