search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆன்லைன் விண்ணப்பம்
    X
    ஆன்லைன் விண்ணப்பம்

    தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள்- இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

    தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த வேண்டாம்

    சென்னை:

    இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள்.

    இந்த திட்டத்தில் எல்.கே.ஜி. அல்லது 1-ம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை.

    தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது. மே 18-ந்தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளது. பள்ளிக் கல்வியின் இணையதளமான rte.tnschools.gov.in மூலம் பெற்றோர் விண்ணப்பிக்க வேண்டும்.

    சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐ.சி.எஸ்.இ. மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் இலவசமாக மாணவர் சேர்க்கை பெறலாம். இந்த திட்டத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் விண்ணப்பிக்கலாம்.

    வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் ஆதரவற்றவர்கள், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் ஆகியோரின் விண்ணப்பங்கள் குலுக்கல் இல்லாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

    நலிந்த பிரிவினருக்கு ஆண்டுக்கு 2 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் இருக்க வேண்டும். ஒரு பெற்றோர் தாங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கி மே 18-ந்தேதி வரை நடைபெறும். இதில் தேர்வுசெய்யப்பட்ட மற்றும் நிராகரிக்கபப்ட்ட மாணவர்களின் விவரங்களை பள்ளிகள் மே 21-ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.

    ஒரு பள்ளியில் சேர அதிக அளவிலான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தால் மே 23-ந்தேதி குலுக்கல் முறையில் மாணவர்களை தேர்வுசெய்ய வேண்டும். ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்ட விவரங்களை மே 29-ந்தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×