search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளழகர் ஆற்றில் இறங்கியபோது தண்ணீரை வாரி இரைத்து மகிழ்ந்த மக்கள்
    X
    கள்ளழகர் ஆற்றில் இறங்கியபோது தண்ணீரை வாரி இரைத்து மகிழ்ந்த மக்கள்

    கள்ளழகர் ஆற்றில் இறங்கியபோது நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலி

    கள்ளழகர் வைகை ஆற்றில் இன்று இறங்கியபோது அதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் மதுரை நகரமே குலுங்கியது.
    மதுரை:

    மதுரை என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது சித்திரை திருவிழா தான். சைவம், வைணவம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவற்றை மதுரை மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்ட மக்களும் ஆனந்தமாக கொண்டாடும் விழா தான் இந்த சித்திரை திருவிழா.

    கடந்த 2 ஆண்டுகளாக இந்த சித்திரை திருவிழா கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பின்றி கோவிலுக்குள்ளேயே நடத்தப்பட்டது. சித்திரை திருவிழாவால் களை கட்டும் மதுரை கடந்த 2 ஆண்டுகளாக களை கட்டவில்லை.

    மீண்டும் சித்திரை திருவிழா எப்போது நடக்கும் என்று மதுரை மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதி ஆன்மிக பக்தர்களும் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்புடன் சித்திரை திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அன்று முதலே சித்திரை திருவிழா கொண்டாட்டத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர். இதில் முதலில் கொண்டாடப்படும் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா, கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் என மதுரை விழாக்கோலம் பூண்டது. மதுரையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழா பக்தர்கள் பங்களிப்புடன் கோலாகலமாக நடைபெற்றது.

    மீனாட்சி சுந்தரேசுவரர், கள்ளழகரை தரிசிக்க மதுரை நகரை நோக்கி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு தரிசனம் செய்த அவர்கள் கடந்த சில நாட்களாக மதுரை நகரையே வலம் வந்தபடி இருந்தனர்.

    இந்நிலையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதை காண லட்சக்கணக்கான மக்கள் தயாராகினர். அழகர் கோவிலில் இருந்து புறப்பட்டு வந்த கள்ளழகரை எதிர்சேவையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று வரவேற்றனர்.

    மதுரை நகரில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் தோல்பையில் தண்ணீரை வைத்து கொண்டு நகர் முழுவதும் வலம் வந்தனர்.

    இந்நிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை நடந்தது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக வைகை அணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் மதுரையில் 2 நாட்களாக மழையும் பெய்ததால் வைகை ஆற்றில் தண்ணீர் அதிக அளவு சென்றது.

    இதனை தொடர்ந்து பக்தர்கள் நலன் கருதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது யாரும் வைகை ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக தடுப்பணை பகுதியில் ஆழம் அதிகமாக இருப்பதால் அங்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது.

    மேலும் பக்தர்கள் ஆற்றுக்குள் இறங்காமல் இருக்க தடுப்பு கட்டைகள் மூலம் வேலி அமைக்கப்பட்டு இருந்தது. கள்ளழகர் வைகை ஆற்றில் இன்று இறங்கியபோது அதனை காண 10 லட்சம் பக்தர்கள் திரண்டதால் மதுரை நகரமே குலுங்கியது.

    கள்ளழகர் வைகை ஆற்றுக்கு வருவதற்கு முன்பே ஆற்றுப்பாலம், ஆற்றுக்குள் கள்ளழகர் இறங்கும் பகுதியான ஆழ்வார்புரம், கோரிப்பாளையம் பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டமே காணப்பட்டது.

    இதன் காரணமாக அந்த பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும் கூட்டத்தில் சிக்கி தவிப்புக்குள்ளானார்கள். அவர்கள் அங்கிருந்து நகர்ந்தால்போதும் என்று நினைத்தாலும் அதற்கு வழி கிடைக்கவில்லை. இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பலரும் மூச்சுவிட திணறினர். சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது.

    மேலும் 10-க்கும் மேற்பட்டோர் கீழே விழுந்து காயம் அடைந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி சுமார் 60 வயது மூதாட்டி மற்றும் 40 வயது ஆண் பரிதாபமாக இறந்தனர். ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட நெரிசலில்தான் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    கூட்ட நெரிசலில் 2 பேர் பலியான சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பலியானவர்களின் உடல்களை பார்த்தனர். பின்னர் காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

    2 ஆண்டுக்கு பிறகு கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கண்டு ரசித்த நிலையில் நெரிசல் சிக்கி 2 பேர் இறந்து விட்டது. அனைவரையும் கவலையடைய செய்து விட்டது.

    இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான ஆண் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த செல்வம் (வயது 40) என்பது தெரியவந்துள்ளது. அவரது உடமைகளை சோதனை செய்தபோது அவரிடம் இருந்த ஏ.டி.எம். கார்டு மூலம் அடையாளம் காணப்பட்டார்.




    Next Story
    ×