search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாலியல் தொல்லை
    X
    பாலியல் தொல்லை

    பட்டதாரி முதல் பள்ளி மாணவன் வரை சிறுமியின் கற்பை சூறையாடிய அவலம்- 2 பேர் கைது

    சிறுமிக்கு பிரசவம் முடிந்த பின் மரபணு சோதனை நடத்தப்பட உள்ளது. அதன் பின்னரே சிறுமியின் கர்ப்பத்துக்கு யார்? காரணம் என தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் பாலன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மனைவி செல்வி (பெயர் மாற்றம்). இந்த தம்பதியருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    திருமணமான சில வருடங்களிலேயே பாலன் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து சென்று விட்டார். பின்னர் செல்வி தனது 2 மகள்களையும் காப்பாற்ற அக்கம் பக்கத்தில் வீட்டு வேலைக்கு சென்றார்.

    சமீபத்தில் மூத்த மகளுக்கு திருமணம் செய்து கொடுத்தார். அவர் அருகில் உள்ள கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார். 15 வயது நிரம்பிய 2-வது மகள் தாயுடன் இருந்தார்.

    இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்தார். கொரோனாவில் பள்ளிகள் மூடப்பட மீண்டும் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டார்.

    தாய் வேலைக்கு செல்லும்போது வீட்டில் தனியாக இருக்கும் அந்த சிறுமியை இளைஞர்கள் சிலர் நோட்டமிட்டனர். அருகில் உள்ள கடைக்கு சென்று வரும்போதும் கண் வைத்துள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் அதே பகுதியை சேர்ந்த ரத்தினவேல் (வயது 21) என்ற டிப்ளமோ பட்டதாரி வாலிபர் வலையில் சிறுமி விழுந்தார்.

    இதையடுத்து சிறுமியின் வீட்டில் இருந்த குளியலறை மற்றும் காவிரிக்கரையோரம் அழைத்து சென்று அவரை சூறையாடியதாக கூறப்படுகிறது. அதன்பின் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் ரத்தினவேல் சிறுமியுடனான தொடர்பை துண்டித்தார்.

    இதற்கிடையே 3 முறை சிறுமியின் கற்பை வேட்டையாடியதாக தெரிகிறது. அதன் பின்னர் சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் துலையாநத்தம் கிராமத்தை சேர்ந்த பாபு (21) என்பவன் சிறுமிக்கு வலை விரித்தான். அதிலும் எளிதில் அவர் விழுந்து விட்டார். சிறிது கால இடைவெளியில் அந்த உறவும் கசந்து போனது. இடைப்பட்ட காலத்தில் ஒரு முறை மட்டுமே பாபு அந்த சிறுமியுடன் நெருக்கமாக இருந்ததாக தெரிகிறது.

    கடைசியாக தொட்டியம் தாலுகாவை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கும், அந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. சிறுமியின் வீட்டின் அருகாமையில் உள்ள ஒரு திருமண பந்தல் கடையில் அவன் வேலை பார்த்து வந்தான். கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட பழக்கம் 4, 5 மாதம் நீடித்தது. இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் தரித்தார்.

    உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை அவரின் தாய் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது குட்டு வெளியானது. விபரம் தெரிந்தவர்கள் சைல்ட் லைனுக்கு தகவல் தெரிவிக்க சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் ஆரோக்கிய மேரி ஜெயா சம்பவ இடம் விரைந்தார்.

    பின்னர் முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் காவிரி, சப்-இன்ஸ்பெக்டர் பானுமதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ரத்தினவேல் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதில் ரத்தினவேல் மணப்பாறை சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான். தற்போது 7 மாதம் கர்ப்பிணியாக உள்ள சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன. பின்னர் காப்பகத்தில் ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    சிறுமியின் கர்ப்பத்துக்கு 3 பேரில் யார்? காரணம் என்பது உறுதி செய்யப்படவில்லை. சிறுமிக்கு பிரசவம் முடிந்த பின் மரபணு சோதனை நடத்தப்பட உள்ளது. அதன் பின்னரே சிறுமியின் கர்ப்பத்துக்கு யார்? காரணம் என தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    அதேபோல் தலைமறைவான பாபுவையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    பொறுப்பற்ற முறையில் குடும்பத்தை தவிக்க விட்டுச் சென்ற தந்தை ஒருபுறம், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க அக்கம்பக்கத்தில் வீட்டு வேலைக்கு சென்று அல்லல்படும் தாய் மறுபுறம். இதற்கிடையே தங்களது இச்சைக்கு ஒரு அபலை சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த பட்டதாரி உள்ளிட்ட சிறுவனுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தரப்பினரின் எதிர்பார்ப்பு.


    Next Story
    ×