search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைப்பு
    X
    சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைப்பு

    மகரவிளக்கு பூஜை காலம் நிறைவு - சபரிமலை கோவில் நடை அடைப்பு

    மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் 12-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    சபரிமலை :

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பாண்டிற்கான மண்டல, மகர விளக்கு பூஜைகாலம் கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கியது. நடை திறக்கப்பட்ட மறுநாள் முதல் பக்தர்கள் கோவிலுக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    இதை தொடர்ந்து மண்டல பூஜை டிசம்பர் மாதம் 26-ந் தேதி நடைபெற்றது. அதன் பிறகு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந் தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. 14-ந் தேதி அன்று புகழ்பெற்ற மகர விளக்கு பூஜை, மகரஜோதி தரிசனம் நடந்தது. நேற்று முன்தினம் வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    நேற்றுடன் மண்டல, மகரவிளக்கு பூஜை நிறைவு பெற்றது. இதனையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பந்தளம் அரச குடும்பத்தின் பிரதிநிதி சங்கர் வர்மா சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் காலை 7 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

    பாரம்பரிய நிகழ்வாக கோவில் சாவி மற்றும் பணக்கிழியை சங்கர் வர்மாவிடம், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஒப்படைத்தார். அதேபோல் கோவில் சாவி மற்றும் பணக்கிழியை அரச குடும்பம் சார்பில் சங்கர் வர்மா மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரியிடம் ஒப்படைத்த பிறகு பிரதான சம்பிரதாய சடங்குகள் நிறைவடைந்தது. 

    இதனை தொடர்ந்து 18-ம் படி வழியாக திருவாபரண பெட்டிகள் சன்னிதானத்தின் கீழ் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. பந்தளம் அரச குடும்ப பிரதிநிதி சங்கர் வர்மா தலைமையில் திருவாபரண பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பந்தளம் அரண்மனைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.  

    மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் 12-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 17-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×