search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பஸ்கள்
    X
    பஸ்கள்

    பொங்கல் பண்டிகையை கொண்டாட அரசு பஸ்களில் 1.15 லட்சம் பேர் ஒரேநாளில் பயணம்

    பொதுவாக பகல் நேரத்தில் பயணம் செய்ய பொதுமக்கள் தயங்குவார்கள் ஆனால் தற்போது இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் இரவுநேர பயணத்தை தவிர்த்து பகல் நேர பயணத்தை விரும்புகிறார்கள்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து நேற்றுமுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    6 பஸ் நிலையங்களில் இருந்து நேற்று 2,520 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதைவிட கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன. நள்ளிரவு 12 மணி நிலவரப்படி வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்கள் மற்றும் 663 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 2,763 பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 665 பயணிகள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் 75,476 பேர் பயணத்துக்காக முன் பதிவு செய்துள்ளனர்.

    இன்று 2,100 வழக்கமான பஸ்களும், கூடுதலாக 1,660 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 3,760 பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரவுநேரத்தைவிட பகல் நேரத்தில் பயணம் செய்ய அதிக பயணிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    தற்போது இரவு ஊரடங்கு அமலில் இருப்பதால் இரவு 10 மணிக்கு மேல் பயணம் செய்யக்கூடியவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பஸ் நிலையங்களுக்கு செல்வதற்கு போக்குவரத்து தடைசெய்யப்பட்டு இருப்பதால் பெரும்பாலானவர்கள் இரவு 10 மணிக்கு முன்னதாகவே பஸ் நிலையங்களுக்கு சென்றடைகிறார்கள்.

    பொதுவாக பகல் நேரத்தில் பயணம் செய்ய பொதுமக்கள் தயங்குவார்கள் ஆனால் தற்போது இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் இரவுநேர பயணத்தை தவிர்த்து பகல் நேர பயணத்தை விரும்புகிறார்கள்.

    இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பகல் நேரத்தில் கூட்டம் அலை மோதுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் பெரும்பாலானவர்கள் இன்று பயணம் செய்கிறார்கள். நேற்றைவிட இன்று கூடுதலாக பஸ்கள் விடப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப பஸ்களை மேலும் இயக்க போக்குவரத்துக்கழகங்கள் தயாராக உள்ளன.

    நாளை (வியாழக்கிழமை) 2,100 வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக 1,920 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 4,020 பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×