search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கைது
    X
    கைது

    மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் கைது - வெளிமாநில அழகிகள் உள்பட 10 பேர் சிக்கினர்

    மசாஜ் சென்டர் போர்வையில் பாலியல் மையங்கள் சென்னையில் அதிகரித்துள்ளன. இதனை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
    சென்னை:

    சென்னையில் மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசுக்கு பல்வேறு புகார்கள் வந்தது.

    இது தொடர்பாக மசாஜ் சென்டர்களை போலீசார் சென்னை முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் ஸ்பா என்ற பெயரில் செயல்பட்டு வந்த குறிப்பிட்ட மசாஜ் நிறுவனத்தில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக கீழ்ப்பாக்கம் துணை கமி‌ஷனர் கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கார்த்திகேயன் ரகசிய விசாரணையில் இறங்கினார். வாடிக்கையாளர் போல ஒருவரை மசாஜ் சென்டருக்கு அனுப்பி வைத்தார்.

    அப்போது மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெற்று வந்தது உறுதியானது. இதையடுத்து துணை கமி‌ஷனர் கார்த்திகேயன் நேரடியாக மசாஜ் சென்டருக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.

    இந்த சோதனையின் போது மசாஜ் சென்டரில் 10 அழகிகள் இருந்தனர். இவர்களில் 8 பேர் தமிழ் பெண்கள் ஆவர். மற்ற இருவரும் மும்பையைச் சேர்ந்தவர்கள்.

    இந்த 10 பேரும் மசாஜ் சென்டரில் மசாஜ் அழகிகளாக வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த அழகிகளில் வாடிக்கையாளர்கள் ஒருவரை தேர்வு செய்து மசாஜுக்கு அழைத்து சென்றதும் அதன் பிறகு அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து மசாஜ் சென்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

    இது தொடர்பாக மசாஜ் சென்டரை நடத்தி வந்த நந்தினி என்ற பெண் கைது செய்யப்பட்டார். அங்கு பணிபுரிந்து வந்த கணேஷ், மதி ஆகியோரும் பிடிபட்டனர். இவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட மசாஜ் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.

    பிடிபட்ட 10 அழகிகளும் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். சென்னையில் இதுபோன்று பல்வேறு மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதுபோன்ற மசாஜ் சென்டர்கள் அனைத்தையும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    மசாஜ் சென்டர்களில் ரூ.1,500 முதல் ரூ.5 ஆயிரம் வரையில் பேக்கேஜ் முறையில் அழகிகளிடம் உல்லாசமாக இருக்க பண வசூல் நடைபெற்று வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக போன் நம்பர்களை குறிப்பிட்டு செல்போன்களுக்கு குறுஞ் செய்திகளையும் மசாஜ் சென்டர் நடத்தும் நிர்வாகிகள் அனுப்பி வருகிறார்கள்.

    அந்த குறுஞ்செய்தியில் 3 பெண்கள் வரையில் மசாஜ் செய்வார்கள் என்பது போன்ற ஆசைவார்த்தைகளை கூறி இளைஞர்களுக்கு வலைவிரித்ததும் தெரிய வந்துள்ளது.

    குறிப்பிட்ட நேரத்துக்கு இவ்வளவு தொகை என குறிப்பிட்டு பண வசூலில் மசாஜ் சென்டர்கள் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சல்லாப எண்ணம் கொண்ட வாலிபர்களும், இளம் தொழில் அதிபர்களும் சென்னையில் மசாஜ் சென்டர்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

    இதனால் மசாஜ் சென்டர் போர்வையில் பாலியல் மையங்கள் சென்னையில் அதிகரித்துள்ளன. இதனை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
    Next Story
    ×