search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமேசுவரம் துறைமுக பகுதியில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணலாம்
    X
    ராமேசுவரம் துறைமுக பகுதியில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணலாம்

    ராமேசுவரம் மீனவர்கள் 4வது நாளாக வேலைநிறுத்தம்- ரூ.10 கோடி வர்த்தகம் பாதிப்பு

    ராமேசுவரம் மீனவர்கள் இன்று 4-வது நாளாகவும், மண்டபம் மீனவர்கள் 2-வது நாளாகவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த 43 மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடந்த 18-ந்தேதி இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். மேலும் அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

    அதன் தொடர்ச்சியாக 19-ந்தேதி மண்டபம் பகுதி மீனவர்கள் 12 பேரும், புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாபட்டினத்தை சேர்ந்த 14 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். தமிழக மீனவர்கள் 69 பேரும் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறைபிடிக்கப்பட்ட 69 மீனவர்கள், அவரது விசைப்படகுகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தினர்.

    மீனவர்கள்

    அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 19-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மேலும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ராமேசுவரம் மீனவர்களை தொடர்ந்து மண்டபம் பகுதி மீனவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

    அவர்கள் நேற்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவ சங்கங்கள் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் கச்சத்தீவை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 69 பேரையும், அவர்களது விசைப்படகுகளையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    அந்த போராட்டத்தில் வருகிற 31-ந்தேதிக்குள் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் 1-ந்தேதி மாலை ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் ரெயிலை தங்கச்சிமடத்தில் மறித்து போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

    மேலும் இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட விசைப்படகுகளை மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், சேதமான படகுகளுக்கு அரசு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், தமிழக மீனவர்கள் பிரச்சினை இல்லாமல் மீன்பிடிக்க கச்சத்தீவை மீட்க வழிவகை செய்ய வேண்டும், தடைப்பட்டுள்ள இந்திய-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக கடலோர மாவட்ட மீனவர்களை ஒன்று திரட்டி சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    ராமேசுவரம் மீனவர்கள் இன்று 4-வது நாளாகவும், மண்டபம் மீனவர்கள் 2-வது நாளாகவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் பாம்பன் பகுதி மீனவர்களும் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி இருக்கின்றனர்.

    ராமேசுவரம், மண்டபம், பாம்பனை சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் ராமேசுவரத்தில் 820 விசைப்படகுகளும், மண்டபத்தில் 500 விசைப்படகுகளும், பாம்பனில் 105 விசைப்படகுகளும் கடலுக்கு செல்லாமல் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த 3 பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மூலம் நாள் ஒன்றுக்கு மீன் வர்த்தகம் ரூ.4 கோடி வரை நடைபெறும். மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் தற்போது வரை ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    வேலைநிறுத்த போராட்டத்தால் ராமேசுவரம், மண்படம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 7 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருப்பது மட்டுமின்றி, இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறும் 20 ஆயிரம் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



    Next Story
    ×