search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணை
    X
    முல்லைப்பெரியாறு அணை

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு மீண்டும் உபரிநீர் திறப்பு

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 141.50 அடியை எட்டியது. நேற்று 1862 கன அடி மட்டுமே வந்த நிலையில் இன்று காலை 4169 கன அடியாக அதிகரித்துள்ளது.
    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை நெருங்கி வரும் நிலையில் மீண்டும் கேரளாவுக்கு உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 1 மாதமாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பே அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ‘ரூல் கர்வ்’ முறையை காரணம் காட்டி கேரளா அணையில் இருந்து வீணாக தண்ணீரை வெளியேற்றியது.

    வருகிற 30-ந் தேதி அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் கனமழை பெய்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 141.50 அடியை எட்டியது. நேற்று 1862 கன அடி மட்டுமே வந்த நிலையில் இன்று காலை 4169 கன அடியாக அதிகரித்துள்ளது. இதே போல தமிழக பகுதிக்கு 2300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் 1800 கன அடி மின் உற்பத்திக்கும் 500 கன அடி நீர் இரைச்சல் பாலம் வழியாகவும் திறக்கப்படுகிறது.

    மேலும் கேரளாவுக்கு 4 ‌ஷட்டர்கள் வழியாக 1746 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 7531 மி.கன அடியாக உள்ளது. இதே அளவு மழை நீடித்தால் கூட இன்றோ அல்லது நாளையோ அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்ட வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு கேரளா தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகிறது என தமிழக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 9-ந் தேதி 69 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து 5 மாவட்ட பாசனத்துக்கும், 58-ம் கால்வாய் பாசனத்துக்கும் தண்ணீர் வெளியேற்றப்பட்டதுடன் உபரிநீரும் வைகை ஆற்றின் வழியாக திறக்கப்பட்டது. இன்று காலை அணையின் நீர் மட்டம் 69.49 அடியாக உள்ளது. நீர் வரத்து 2649 கன அடி. நீர் மட்டம் 70 அடியை தாண்டும் நிலையில் இருப்பதால் அணையில் இருந்து 5119 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    நீர் இருப்பு 5698 மி.கன அடியாக உள்ளது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் மீண்டும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    பெரியாறு 19.4, தேக்கடி 35.8, கூடலூர் 51.4, சண்முகாநதி அணை 32.5, உத்தமபாளையம் 18.2, வீரபாண்டி 47, வைகை அணை 3.8, மஞ்சளாறு 5, மருதாநதி 4, சோத்துப்பாறை 19, கொடைக்கானல் 8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    Next Story
    ×