search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    அனைத்து காய்கறிகளும் வரலாறு காணாத விலை உயர்வு

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் காய்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. பீன்ஸ், கேரட், வெண்டைக்காய், தக்காளி, சின்ன வெங்காயம், அவரைக்காய் போன்ற காய்கறிகளின் விலை ஒரு கிலோ ரூ.100-ஐ தாண்டியது.
    சென்னை:

    சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே காய்கறிகள் விலை படிப்படியாக அதிகரித்தது.

    தீபாவளி பண்டிகை அதனை தொடர்ந்து பருவமழையால் அனைத்து காய்கறிகள் விலை உயர்ந்தன. ஏழை, நடுத்தர மக்கள் பயன்படுத்தக்கூடிய கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய், வெங்காயம், முருங்கைக்காய் போன்றவற்றின் விலை தாறுமாறாக உயர்ந்தது.

    தங்கத்தின் விலையை போல கிடுகிடுவென்று தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த வாரங்களில் தக்காளி, வெங்காயம், முருங்கைக்காய் போன்றவற்றின் விலை 100 ரூபாய்க்கு விற்றது.

    தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் காய்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. பீன்ஸ், கேரட், வெண்டைக்காய், தக்காளி, சின்ன வெங்காயம், அவரைக்காய் போன்ற காய்கறிகளின் விலை ஒரு கிலோ ரூ.100-ஐ தாண்டியது.

    கோயம்பேடு காய்கறி மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூ.70, ரூ.80-க்கு விற்கப்படுகின்ற இந்த காய்கறிகள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ரூ.120-க்கு மேலாக விற்கப்படுகிறது. இதனால் ஏழை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    தொடர் மழையால் காய்கறிகள் வரத்து குறைந்ததே இதற்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கோயம்பேடு உருளைகிழங்கு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது:-

    எனது 50 வருட அனுபவத்தில் காய்கறிகளின் விலை இந்த அளவுக்கு உயர்ந்தது இல்லை. இன்று மொத்த விலையாக கத்தரிக்காய், ரூ.70, பீன்ஸ் ரூ.80, கேரட் ரூ.80, முருங்கைக்காய் ரூ.100, தக்காளி ரூ.70-80, சாம்பார் வெங்காயம் ரூ.80, அவரை ரூ.60-70, வெண்டை ரூ.80-க்கு விற்கப்படுகிறது.

    ஒருசில காய்கறிகள் தவிர பெரும்பாலான காய்கறிகள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. விலை குறைவதற்கு இன்னும் பல நாட்கள் ஆகும். கடந்த வாரங்களில் ரூ.15-க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் இன்று ரூ.80-க்கு விற்கப்படுகிறது.

    இந்த விலை உயர்வு சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 350 முதல் 400 லாரிகளில் காய்கறிகள் வருவது வழக்கம். ஆனால் தற்போது 200 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் வருகின்றன. தொடர் மழையால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டதே இந்த விலை உயர்வுக்கு காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×