search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    “யாரையும் தவறாக பேச வேண்டாம்”- திருக்குறளை மேற்கோள் காட்டி எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

    ஓ.பன்னீர்செல்வம் கருத்து கட்சியில் விவாத பொருளாக மாறியுள்ள நிலையில் யாரையும் தவறாக பேசவேண்டாம் என கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து பேசியுள்ளார்.
    சேலம்:

    அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்ப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இதுபற்றி கட்சி தலைமை நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என கூறியிருந்தார். அவரது கருத்துக்கு அ.தி.மு.க. தலைவர்களிடையே ஆதரவும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி நேற்று, சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து திடீரென ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சேலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் வருகிற நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலின் போது எவ்வாறு பூத் கமிட்டி அமைத்து பணியாற்றினோமோ? அதே போல மாநகராட்சி தேர்தலிலும், பணியாற்ற வேண்டும், அத்தேர்தலில் கூட சில இடங்களில் சிறப்பாக பணியாற்றவில்லை என்றாலும் வெற்றி பெற்று விட்டோம்.

    தமிழ்நாட்டிலேயே சேலம் மாநகராட்சிக்கு அதிக நிதியை ஒதுக்கி நமது ஆட்சியில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினோம், நாம் செய்த திட்டங்கள் குறித்து வீடு, வீடாக சென்று மக்களிடம் எடுத்து கூற வேண்டும். நம்மிடம் வேற்றுமை இருக்க கூடாது, ஒரு வார்டில் ஒருவருக்கு தான் சீட் கொடுக்க முடியும். சீட் கிடைக்காதவர்கள் மாற்று கட்சிக்கு செல்வதோ, சுயேட்சையாக நிற்கவோ கூடாது, இன்னும் 10 நாளில் பகுதி செயலாளர்களை அழைத்து பேசுவேன்.

    பூத் கமிட்டி அமைத்து அதில் அவர்களது பெயருடன் செல்போன் நம்பரையும் வைத்திருக்க வேண்டும், காலையில் 2 பகுதி, மாலையில் 2 பகுதி என பூத் கமிட்டியை அழைத்து நானே பேசுவேன். எனக்கு வயிற்று வலி இருக்கிறது. வலியையும் பொருட்படுத்தாமல் உங்களிடம் பேசுகிறேன், ஏனென்றால் நமக்கு வெற்றி முக்கியம். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

    யாரைப்பற்றியும் தவறாக பேச வேண்டாம், ‘தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு’ என்று திருவள்ளுவர் கூறி உள்ளார். தீயில் சுட்ட புண ஆறி விடும், கடும் சொற்கள் ஆறாது என்பதை அனைவரும் உணர வேண்டும், யாரையும் தவறாக பேச வேண்டாம், அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து வெற்றி பெற வேண்டும்.

    கடந்த காலங்களில் நான், செம்மலை போன்றோர் மக்களிடம் ஓட்டு கேட்டால் உங்களுக்கு மட்டுமே ஓட்டுபோடுவேன் என்று கூறுவார்கள். ஆனால் தற்போது யார் கேட்டாலும் உங்களுக்கு ஓட்டு போடுகிறேன் என்று கூறுகிறார்கள். சுயேட்சையிடமும் அப்படியே கூறுகிறார்கள். ஆனால் ஓட்டு யாருக்கு போடுகிறார்கள் என்று தெரியவில்லை. மக்களை புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கு ஸ்கேன் எடுத்தார்கள். ரத்த பரிசோதனை செய்தார்கள். தற்போது அட்மிட் ஆக வேண்டும் என்கிறார்கள். ஒரு வியாதியை கண்டுபிடிக்கவே இத்தனை டெஸ்டுகள் எடுக்க வேண்டியதிருக்கும்போது மக்கள் மனசை எப்படி புரிந்து கொள்வது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஓ.பன்னீர்செல்வம் கருத்து கட்சியில் விவாத பொருளாக மாறியுள்ள நிலையில் யாரையும் தவறாக பேசவேண்டாம் என கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து பேசியுள்ளார். இதனிடையே எடப்பாடி பழனிசாமி இன்று காலை கார் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். சென்னையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை அவர் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
    Next Story
    ×