search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 19 ஆயிரத்து 68 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 28 ஆயிரத்து 394 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர்:

    கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால் கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    ஒகேனக்கல்லில் நேற்று வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 29 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஒகேனக்கல்லில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 19 ஆயிரத்து 68 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 28 ஆயிரத்து 394 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 100 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. கால்வாயில் 550 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 82.92 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 85.17 அடியாக உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் 2 அடிக்கும் மேல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×