search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காந்தி சிலைக்கு அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
    X
    காந்தி சிலைக்கு அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

    மேலாடை துறந்த நூற்றாண்டு விழா- மதுரையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

    காந்தியடிகள் அரை ஆடை அணிந்து முதலில் பேசிய மதுரை காந்தி பொட்டலில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் மூர்த்தி இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    மதுரை:

    சுதந்திர போராட்டத்தின்போது 1921-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி ஒத்துழையாமை இயக்க பரப்புரைக்காக தேசத்தந்தை மகாத்மா காந்தி மதுரை வந்தார்.

    அப்போது விவசாயிகளின் நிலைமையை கண்டு வருந்திய அவர் அன்று முதல் தன்னுடைய மேலாடையை துறந்து முழந்தாள் வேட்டி மட்டும் அணியும் வழக்கத்தை மேற்கொண்டார்.

    மகாத்மா காந்தி அரையாடை புரட்சி மேற்கொண்டு இன்றுடன் 100 ஆண்டுகள் ஆகின்றன. இதனை நினைவுகூரும் வகையில் இன்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காந்தி அரை ஆடை அணிந்த மதுரை மேலமாசி வீதியில் உள்ள நினைவகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இன்று காலை அங்குள்ள மார்பளவு கொண்ட காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    பின்னர் அங்கு விளக்கேற்றி சர்வசமய பிரார்த்தனை நடந்தது. இதில் அரசு அதிகாரிகள், காந்தி மியூசிய நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    காந்தியடிகள் அரை ஆடை அணிந்து முதலில் பேசிய மதுரை காந்தி பொட்டலில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் மூர்த்தி இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன், பூமிநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்திலும் சர்வசமய பிரார்த்தனை, சிறப்பு சொற்பொழிவு, காந்தியம் குறித்த மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை நடைபெற்றன.

    மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் முப்பெரும் விழா நடக்கிறது. இதில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, திரைப்பட இயக்குனர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    தொடர்ந்து இந்த விழாவில் நவீன கதர் ஆடை அறிமுகம், செந்தமிழ் விருதுகள், இளம் பட்டிமன்ற பேச்சாளர்களுக்கான போட்டிகள், நூல் வெளியீட்டு விழா ஆகியவை நடக்கிறது.

    முன்னதாக நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா மதுரை வந்தார். மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், மீனாட்சி அம்மன் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார். இன்று காந்தி மியூசியத்திலும் நடந்த நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


    Next Story
    ×