search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    இட ஒதுக்கீடு குறித்து மத்திய மந்திரி கருத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு

    பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சாதிகளை சேர்க்கும் உரிமையை மாநிலங்களுக்கு மீண்டும் வழங்குவதற்காக அரசியல் சட்டத்தின் 342-வது பிரிவை திருத்தும் மசோதாவை வரும் 19-ந் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    பிற்படுத்தப்பட்ட வகுப்பில் எந்தெந்த சாதிகளை சேர்த்து, இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என்று மத்திய மந்திரி தாவர்சந்த் கெலாட் கூறியிருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 102-வது திருத்தத்தின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சாதிகளை சேர்க்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று மராத்தா வழக்கில் அளித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ள நிலையில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

    கோர்ட்டு தீர்ப்பால் மாநிலங்களின் உரிமை பறிக்கப்படுவதாகவும், இந்த சமூக அநீதியைக் களைய அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதை இப்போது மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சாதிகளை சேர்க்கும் உரிமையை மாநிலங்களுக்கு மீண்டும் வழங்குவதற்காக அரசியல் சட்டத்தின் 342-வது பிரிவை திருத்தும் மசோதாவை வரும் 19-ந் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×