search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வங்கி ஏ.டி.எம்.களில் ரூ.48 லட்சம் கொள்ளை- வடமாநில கொள்ளையர்களின் நூதன திருட்டு பற்றி பரபரப்பு தகவல்கள்

    சென்னை உள்பட தமிழகத்தில் 19 இடங்களில் வங்கி ஏ.டி.எம்.களில் நூதனமுறையில் ரூ.48 லட்சத்தை வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்தது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
    சென்னை:

    வங்கி ஏ.டி.எம். மையங்களில் தற்போது பணம் செலுத்தும் வசதி கொண்ட எந்திரங்களும் வைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற ஏ.டி.எம். எந்திரங்களில் மட்டும் நூதன கொள்ளை நடந்து இருக்கிறது. குறிப்பாக ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரங்களை குறிவைத்து இந்த கொள்ளை அரங்கேறி உள்ளது.

    சென்னையில் மட்டும் 7 இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    இந்த கொள்ளை சம்பவத்தை தடுப்பது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுடன், பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல தலைமை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று கமிஷனர் அலுவலகத்தில் வைத்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையங்களில், பணம் போடும் எந்திரங்கள் வாயிலாக நூதன முறையில் பணம் திருட்டு நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் இது தொடர்பாக 19 புகார்கள் வந்துள்ளன.

    இதனால் பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.48 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு இதனால் இழப்பீடு ஏற்படவில்லை. சென்னையில் கடந்த 17-ந்தேதி, 18-ந்தேதி மற்றும் 19-ந்தேதி ஆகிய 3 நாட்களில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக சென்னையில் 7 புகார்கள் வந்துள்ளன.

    சாதாரண வங்கி அட்டையை பயன்படுத்தி பணம் போடும் எந்திரத்தில் பலமுறை பணத்தை எடுத்துள்ளனர். ஆனால் பணத்தை எடுத்த தகவல் வங்கிக்கு தெரியாதபடி நூதன முறையை கையாண்டு இந்த திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல தலைமை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணனுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். நூதன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த திருட்டு நடந்துள்ளது.

    இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தவுடன் தங்களது ஏ.டி.எம். மையங்களில் உள்ள அனைத்து எந்திரங்களிலும் பணம் செலுத்தும் வசதியை தற்காலிகமாக நிறுத்தி விட்டனர். பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எந்திரத்தில் உள்ள சிறிய தவறை தெரிந்து கொண்டு இந்த திருட்டை நடத்தி உள்ளனர். இது தொடர்பான முழு விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் எங்களிடம் கொடுத்துள்ளது. அது பற்றி ஆய்வு செய்து வருகிறோம்.

    தமிழகத்தில் முதல் முறையாக இது போன்ற நூதன திருட்டு நடந்துள்ளது. வடமாநில கும்பல் இதில் சம்பந்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த ஏ.டி.எம். மையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளோம். 4 கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மற்ற வங்கி ஏ.டி.எம். மையங்களிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதா? என்று கேட்டுள்ளோம்.

    மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. அதற்கும், இங்கு நடந்த சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரித்து வருகிறோம்.

    தென்சென்னை கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையில் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல தலைமை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஏ.டி.எம். மையங்களில் பணம் போடும் எந்திரங்கள் வாயிலாக மட்டுமே இந்த நூதன திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கியை பொருத்தவரை குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுக்கு சொந்தமான பணம் போடும் எந்திரங்களை மட்டும் பயன்படுத்தி வருகிறோம். அதில் ஒரு நிறுவனத்தின் எந்திரங்களில் மட்டும் இந்த நூதன திருட்டு நடந்துள்ளது. அந்த நிறுவனத்திடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த நூதன திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய கொள்ளையர்கள் ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படையினர் விரைந்துள்ளனர்.
    Next Story
    ×