search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீரநாராயணமங்கலம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய காட்சி.
    X
    வீரநாராயணமங்கலம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய காட்சி.

    குமரியில் இன்றும் கன மழை- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

    பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் நேற்று ஒரு நாளில் 1 அடியும், பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 2 அடியும், சிற்றாறு அணைகளின் நீர் மட்டம் 1½ அடியும் உயர்ந்துள்ளது.
    நாகர்கோவில்:

    தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னத்தின் காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

    கோழிப்போர்விளை, அடையாமடை, கொட்டாரம், மைலாடி, இரணியல், குளச்சல், பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

    இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் மின் வயர்களும் அறுந்து விழுந்தது. மின்தடையும் ஏற்பட்டது. குமரி மாவட்டத்தில் பல கிராமங்கள் இரவு முழுவதும் இருளில் மூழ்கியது. நேற்று மாலை துண்டிக்கப்பட்ட மின்சாரம் பல இடங்களில் இன்று காலை வரை வரவில்லை. இதனால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.

    நாகர்கோவிலில் இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. திடீரென மழை பெய்யத்தொடங்கியது. லேசாக பெய்ய தொடங்கிய மழை பின்னர் வேகமாக கொட்டித்தீர்த்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மார்த்தாண்டம், திருவட்டார், பொன்மனை, அருமனை, இரணியல், குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மழை கொட்டியது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் அணை பகுதிகளிலும் கொட்டித்தீர்த்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர் வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.

    பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் நேற்று ஒரு நாளில் 1 அடியும், பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 2 அடியும், சிற்றாறு அணைகளின் நீர் மட்டம் 1½ அடியும் உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் இன்று காலை 43 அடியாக இருந்தது. அணைக்கு 1532 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 175 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதையடுத்து குழித்துறை ஆறு, கோதையாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு தாண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணையின் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் காரணமாக களியல், திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை, எஸ்.டி.மங்காடு, கணபதியான் கடவு, தேங்காய்ப்பட்டணம் பகுதியில் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

    பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 57.80 அடியாக உள்ளது. அணைக்கு 1510 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு1 அணையின் நீர் மட்டம் 9.97 அடியாகவும், சிற்றாறு2 அணையின் நீர் மட்டம் 10.07 அடியாகவும் உள்ளது.

    கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்குள்ள சிறுவர் பூங்காவை தாண்டி வெள்ளம் கொட்டுகிறது.

    குழித்துறை ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறையில் உள்ள சப்பாத்து பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கரையோர பகுதியில் உள்ள வயல்வெளிகள், தென்னந்தோப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    வள்ளியாறு, பரளியாறு, பழையாறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பழையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கின் காரணமாக வடக்கு தாமரைகுளம் பகுதியில் உள்ள வயல்வெளிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    தொடர் மழையின் காரணமாக பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. புத்தேரி நெடுங்குளம் நிரம்பி வருவதையடுத்து விவசாயிகள் குளத்தின் மதகுகளை திறந்து இன்று தண்ணீரை வெளியேற்றினார்கள். புத்தேரி குளம் நிரம்பி வருவதால் புளியடி ரோட்டில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் ஒரு சில குளங்கள் உடைப்பு ஏற்படும் தருவாயில் உள்ளது. பொதுப் பணித்துறை அதிகாரிகள் அதை கண்காணித்து சீரமைக்கும் பணியை மேற்கொண்டு உள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை- 71.2, பெருஞ்சாணி- 81.8, சிற்றாறு1- 78.4, சிற்றாறு2- 68.4, மைலாடி- 58.8, கொட்டாரம்- 36, இரணியல்- 22.4, குளச்சல்- 64, குருந்தன்கோடு- 46, நாகர்கோவில்- 53.6, பூதப்பாண்டி- 40.2, சுருளோடு- 70.6, ஆரல்வாய்மொழி- 20, திற்பரப்பு- 64.8, புத்தன்அணை- 79.6, அடையாமடை- 57, கோழிப்போர்விளை- 92, திருவட்டார்- 15.4, முள்ளங்கினாவிளை - 87.
    Next Story
    ×