search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுஜா
    X
    சுஜா

    கோவில்பட்டியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    கோவில்பட்டியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவதற்கு முன்பு உருக்கமாக பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபாநகர் சுதர்சன் கார்டனைச் சேர்ந்தவர் அமல்தாஸ் (வயது 58). இவருடைய மகள் சுஜா (வயது 30).

    இவருக்கும், விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர் மணிப்பாறை பட்டியைச் சேர்ந்த வீரராகவன் என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஜோகித் என்ற ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் சுஜாவின் சகோதரியை, வீரராகவன் சகோதரர் கார்த்திக் என்பவருக்கு பெண் கேட்டுள்ளனர். ஆனால் அமல்தாஸ் குடும்பத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் சுஜாவுக்கும், அவருடைய கணவர் வீரராகவனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் மனவேதனை அடைந்த சுஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். நேற்று முன்தினம் சுஜா வீட்டில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இதை பார்த்து பதறிப்போன பெற்றோர், அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சுஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    இதுகுறித்து சுஜாவின் தந்தை அமல்தாஸ் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், தனது மகளை அவருடைய கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, சுஜா சாவதற்கு முன்பு உருக்கமாக பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர், தனது சாவுக்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த சித்ரவதை தான் காரணம் என்றும், தனது குழந்தையை நல்ல முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கூறி உள்ளார். இதுகுறித்தும் போலீசாார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சுஜாவுக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகளே ஆவதால், அவரது சாவு குறித்து உதவி கலெக்டர் சங்கர நாராயணன் விசாரணை நடத்தி வருகிறார்.

    வீடியோ பதிவு செய்து விட்டு இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×