search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பனை ஓலையால் தயார் செய்யப்பட்ட பட்டையில் பதநீர் அருந்தும் பொதுமக்கள்.
    X
    பனை ஓலையால் தயார் செய்யப்பட்ட பட்டையில் பதநீர் அருந்தும் பொதுமக்கள்.

    நெல்லை மாவட்டத்தில் பதநீர் விற்பனை தீவிரம்

    பொதுமக்கள் பதநீர் இறக்கும் இடங்களுக்கு சென்று பதநீர் வாங்கி அருந்துகின்றனர். ஒரு லிட்டர் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    களக்காடு:

    கோடை காலங்களில் வெப்பத்தை தணிக்கும் இயற்கை பானமான பதநீரை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி அருந்துவார்கள். இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பதநீரில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

    கோடை கால நோய்களை தடுக்கும் வல்லமை மிக்கது பதநீர் ஆகும். மஞ்சள்காமாலை, அம்மை போன்ற நோய்களுக்கு ஏற்ற இயற்கை பானமான பதநீர் மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

    ரசாயனங்கள் அடங்கிய செயற்கை குளிர்பானங்களை அருந்துவதை விட இயற்கையாக கிடைக்கும் பதநீரை பனை ஓலை பட்டைகளில் அருந்துவது சுவைமிக்கது மட்டுமல்ல, நமது உடலுக்கும் நல்லது என்கின்றனர். இந்தாண்டும் பனை தொழிலாளர்கள் பதநீர் இறக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் களக்காடு, சிதம்பரபுரம், சாலைப்புதூர், மாவடி, மலையடிபுதூர், திருக்குறுங்குடி, ராஜபுதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன.

    தற்போது கோடை காலம் என்பதால், இந்த பனை மரங்களில் இருந்து பதநீர் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் அதிகாலையில் பனை மரங்களில் ஏறி ஏற்கனவே பனை மரங்களில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் மண் கலசங்களில் இருந்து பதநீர் இறக்குகின்றனர்.

    பொதுமக்கள் பதநீர் இறக்கும் இடங்களுக்கு சென்று பதநீர் வாங்கி அருந்துகின்றனர். ஒரு லிட்டர் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வியாபாரிகள் தொழிலாளர்களிடம் பதநீரை கொள்முதல் செய்து ஊர் பகுதிகளில் வீடு, வீடாகவும் பதநீர் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சமீபகாலமாக பனை ஏறும் தொழில் அழிவை நோக்கி செல்வதாக தொழிலாளர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.

    குறிப்பாக இப்பகுதிகளில் முன் காலத்தில் ஏராளமானோர் பனை ஏறும் தொழில் செய்து வந்த நிலையில் தற்போது விரல் விட்டும் எண்னும் வகையில் ஒரு சிலர் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

    அதிக வருமானம் கிடைப்பதில்லை என்பதாலும், 3 மாத தொழிலாக இருப்பதாலும் இளைஞர்கள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இயற்கை அன்னையின் நன்கொடையான பனை மரங்களையும், அதிலிருந்து கிடைக்கும் மகத்துவமிக்க பொருட்களையும் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டுமானால் பனை ஏறும் தொழிலை ஊக்கப்படுத்தினால் மட்டுமே முடியும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே அரசு பனை ஏறும் தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பனை ஏறும் தொழிலை ஊக்கப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    Next Story
    ×