search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலையில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள தக்காளி பழங்கள்.
    X
    உடுமலையில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள தக்காளி பழங்கள்.

    உடுமலையில் சாலையோரம் தக்காளி பழங்களை கொட்டும் விவசாயிகள்

    உடுமலை பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் மொத்த வியாபார சந்தைக்கு தக்காளி வரத்து அதிக அளவில் உள்ளது.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளைப்போல இல்லாமல் இங்கு ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி நடைபெறுவதால் வெளியூர்களை சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவில் இங்கு வந்து தக்காளி வாங்கி செல்வர்.

    இது தவிர கேரள மாநில வியாபாரிகளும் உடுமலை சந்தைக்கு வந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தற்போது 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ. 20 முதல் ரூ.40 வரையே விற்பனையாவதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    உடுமலை பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் மொத்த வியாபார சந்தைக்கு தக்காளி வரத்து அதிக அளவில் உள்ளது. ஆனால் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தற்போது போதுமான அளவில் தக்காளி விளைச்சல் உள்ளது. இதனால் வெளியூர் வியாபாரிகளின் வருகை குறைவாகவே உள்ளது. இதன்காரணமாக 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி நன்கு பழுத்ததாக இருந்தால் ரூ.20க்கும், காய்வெட்டாக இருந்தால் ரூ.40 வரையும் விற்பனையாகிறது.

    விளைநிலத்தில் விளையும் தக்காளியை வாகனங்களில் ஏற்றி சந்தைக்குக் கொண்டு வருவதற்கு தூரத்தைப் பொறுத்து ஒரு பெட்டிக்கு ரூ.15 முதல் ரூ.30 வரை வாடகை கொடுக்க வேண்டியதுள்ளது. இதுதவிர ஒரு பெட்டிக்கு இறக்கு கூலியாக ரூ.1.50 மற்றும் கமி‌ஷன் தொகையாக 10 சதவீதம் கொடுக்க வேண்டியதுள்ளது. இதுதவிர பறிப்பதற்கு ஆள் கூலியாக ஒரு நபருக்கு ரூ.400 கூலியாக கொடுக்கிறோம்.

    அந்தவகையில் சாகுபடி செலவு மற்றும் விவசாயியின் உழைப்பைக் கணக்கிடாமல் அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டு வரும் வரையில் ஒரு பெட்டிக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை செலவாகிறது.

    இதனால் 50 பெட்டி தக்காளியை விற்பனைக்குக்கொண்டு வந்தால் கையிலிருந்து ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு வீடு செல்ல வேண்டிய வேதனையான நிலை உள்ளது. இதனால் சில விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். செடி வீணாகி விடும் என்று எண்ணும் விவசாயிகள் கூலி கொடுத்து தக்காளி பழங்களைப் பறித்து சாலையோரம் வீசி செல்கின்றனர். பெரும்பாலான விவசாயிகள் உழவு ஒட்டி தக்காளித் தோட்டங்களை அழிக்கவும் தயாராகி விட்டார்கள். ஒவ்வொரு ஆண்டிலும் வரத்து அதிகரிக்கும்போது விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை தொடர்கிறது என்றனர்.
    Next Story
    ×