search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    தருமபுரி அருகே தாய்-தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மெக்கானிக்

    தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே பணம் கேட்டு பெற்ற தாய் தந்தையே மகனே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பூச்செட்டி அள்ளி கிராமத்தை சேர்ந்த பெரமன் என்பவரது மகன் ராமச்சந்திரன் (வயது 65). இவரது மனைவி சின்னராஜி(60). இவர்களுக்கு மகன் ராமசாமி (40) மகன் சுமதி(35) ஆகியோர் உள்ளனர்.

    இதில் மகன் ராமசாமி பூச்செட்டி கிராமத்தில் கடை வைத்து இருசக்கர வாகன மெக்கானிக் வேலை செய்து வருகிறார். மகள் சுமதி பென்னாகரம் அருகே உள்ள பி.அக்ரஹாரம் பகுதியில் திருமணமாகி கணவர் வீட்டில் உள்ளார். ராமச்சந்திரன் மற்றும் சின்னராஜி இருவரும் பூச்செட்டியில் தனியாக வசித்து வருகின்றனர். பக்கத்தில் உள்ள வீட்டில் மகன் ராமசாமி, தனது மனைவி குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் ராமசாமியின் தாய் சின்னராஜி தனது பெயரில் இருந்த நிலத்தின் ஒரு பகுதியை மகன் மற்றும் மகளுக்கு கொடுத்துள்ளார். தனக்கு கொடுத்த நிலத்தில் சுமதி புதிதாக வீடுகட்டி வந்தார். இந்த நிலையில் மெக்கானிக் ராமசாமி தானும் புதிய வீடுகட்ட வேண்டும் என்று தனது தாயாரிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த ராமசாமி தனது தாய் சின்னராஜியிடம் மீண்டும் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த ராமசாமி தனது கடையில் இருந்த இரும்பு கம்பியால், தாய் சின்னராஜியைத் தாக்கினார்.

    இதில் மண்டை உடைந்து சின்னராஜி ரத்த வெள்ளத்தில் தனது வீட்டு வாசலில் சாய்ந்தார். அவரது அலறல் கேட்டு தடுக்க வந்த தந்தை ராமச்சந்திரனையும் அதே கம்பியால் அடித்துள்ளார். இதில் தாய், தந்தை இருவரும் ரத்த வெள்ளத்தில் துடித்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆம்புலன்ஸை வரவழைத்தனர். அதற்குள் இருவரும் துடி துடித்து பரிதாபமாக இறந்து விட்டனர்.

    இந்த நிலையில் பெற்றோர்களை கொன்று விட்டு தப்பி சென்ற ராமசாமி நேற்று நள்ளிரவில் இண்டூர் போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதையடுத்து கொலையுண்ட ராமச்சந்திரன், அவரது மனைவி சின்ன ராஜி ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    பணம் கேட்டு பெற்ற தாய் தந்தையே மகனே அடித்துக்கொன்ற கொடூரம் இண்டூர் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×