search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

    உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெண் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி போலீஸ் சரகம் பனையபுரம் காலனியை சேர்ந்தவர் லியோபால் (வயது 33). வேன் டிரைவர். இவரது மனைவி சுஜிதாமேரி (24). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    லியோபால் கடந்த மாதம் 4-ந்தேதி இரவு உறவினர் திருமணத்துக்கு சென்றதாகவும், அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை என சுஜிதாமேரி சென்னையில் உள்ள தனது மாமனார் சாகாயராஜிடம் கூறினார்.

    மகன் காணமல் போனது குறித்து போலீசில் புகார் தெரிவிப்பதற்காக சகாயராஜ் பனையபுரம் வந்தார். அப்போது வீட்டில் சுஜிதாமேரி இல்லை. குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்தனர். வீட்டின் பின்புறம் புதிதாக பள்ளம்தோண்டி மூடப்பட்ட தடம் இருந்தது.

    இதையடுத்து குழந்தைகளிடம் அவர் கேட்டபோது, காலையில் இருந்து சுஜிதாமேரியை காணவில்லை என்று தெரிவித்தனர். இதுகுறித்து சகாயராஜ் விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகன், மருமகள் ஆகியோரை காணவில்லை என்றும், வீட்டின் பின்புறம் புதிதாக பள்ளம் தோண்டப்பட்ட தடயம் உள்ளது என்றும் கூறியிருந்தார்.

    மேலும் எனது மகன் வீட்டின் அருகே உள்ள ராதாகிருஷ்ணன் என்பவரையும் காணவில்லை என்றும் கூறியிருந்தார். இதையடுத்து நேற்று காலை விக்கிரவாண்டி போலீசார் லியோபாலின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த சந்தேகத்துக்கிடமான இடத்தை தோண்டினர்.

    அப்போது அங்கு கைகள் கட்டப்பட்டு அழுகியநிலையில் ஆண்பிணம் இருந்தது. இதை பார்த்ததும் சகாயராஜ் தனது மகன் லியோபால்தான் என உறுதி செய்தார். லியோ பாலின் கழுத்து அறுக்கப்பட்டும், தலையில் பலத்த காயங்களும் இருந்தன. இதையடுத்து லியோபாலின் உடலை அதே பகுதியில் வைத்து மருத்துவகுழுவினர் பிரேத பரிசோனை செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-

    லியோபால், பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(20). கல்லூரி மாணவரான இவருக்கும், சுஜிதா மேரியும்அடிக்கடி பேசிவந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. அதன்பின்னர் லியோபால் வீட்டில் இல்லாத நேரத்தில் ராதாகிருஷ்ணனும், சுஜிதாமேரியும் அடிக்கடி உல்லாசமாக இருந்துவந்தனர்.

    இதை அறிந்த லியோபால் அவர்கள் 2 பேரையும் கண்டித்துள்ளார். ஆனால் சுஜிதாமேரியும், ராதாகிருஷ்ணனும் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சுஜிதாமேரி அவரது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவர் லியோபாலை கொலை செய்ய திட்டமிட்டார்.

    இந்த திட்டத்தை சுஜிதாமேரி அவரது கள்ளக்காதலன் ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். அவரும் இதற்கு சம்மதித்துள்ளார்.

    சம்பவத்தன்று இரவு மதுபோதையில் இருந்த லியோபாலை அவரது மனைவி சுஜிதாமேரி, கள்ளக்காதலன் ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து இரும்பு கம்பியால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்தார். பின்னர் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் குழிதோண்டி லியோபாலின் உடலை புதைத்தனர்.

    அதன்பின்னர் சுஜிதாமேரி தனது கணவரை காணவில்லை என்று தனது மாமனாருக்கு போன்செய்து கூறியுள்ளார். இருப்பினும் நாம் போலீசாரிடம் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கள்ளக்காதலர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து கணவரை கொலை செய்து விட்டு கள்ளக்காதலனுடன் தப்பி ஓடிய பெண்ணை பிடிக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார். தனிப்படை போலீசார் தலைமறைவான கள்ளக்காதல் ஜோடியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெண் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×