search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நித்திரவிளை அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற பட்டதாரி வாலிபர் கைது

    நித்திரவிளை அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நித்திரவிளை:

    நித்திரவிளை அருகே உள்ள சின்னத்துறை பகுதியில் ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்திற்கு நேற்று வாடிக்கையாளர்கள் வழக்கம்போல் பணம் எடுக்க வந்தனர்.

    அப்போது அந்த ஏ.டி.எம். எந்திரம் உடைந்து காணப்பட்டது. இது குறித்து வங்கி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து வங்கி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    அப்போது ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி நடந்திருப்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு nfமிராவில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகளை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அதில், நள்ளிரவு நேரத்தில் வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைவதும், ஏ.டி.எம். எந்திரத்தை அவர் உடைக்க முயற்சி செய்வதும், எந்திரத்தை உடைக்க முடியாமல் திரும்பி செல்வதும் பதிவாகி இருந்தது. ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்தது குறித்து நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் வங்கியின் மேலாளர் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எம். மைய சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரின் முகம் நன்கு அடையாளம் தெரிந்தது. அதனை கொண்டு அந்த வாலிபர் யார்? என்று சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த வாலிபர் சின்னத்துறை கிராமம் செபாஸ்டின் தெருவைச் சேர்ந்த ஆபிரகாம் என்பவரின் மகன் அபின் என்கிற வினோத் (வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் பதுங்கி இருந்த வினோத்தை நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர்.

    வாலிபர் வினோத் பி.ஏ. படித்துள்ளார். ஆனால் வேலைக்கு எங்கும் செல்லாமல் சுற்றி திரிந்தார். இதனால் செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    அவருக்கு வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் நித்திரவிளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×