search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புத்துணர்வு முகாமில் யானைகள் உற்சாகம் (கோப்புப்படம்)
    X
    புத்துணர்வு முகாமில் யானைகள் உற்சாகம் (கோப்புப்படம்)

    மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமில் யானைகள் உற்சாகம்

    மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமில் பங்கேற்ற யானைகள் அனைத்தும் இன்று காலை நடைபயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டன.
    மேட்டுப்பாளையம்:

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேட்டுப்பாளையம் வனப்பத்ர காளியம்மன் கோவில் பவானி ஆற்றுப்படுகையில் ஒவ்வொரு ஆண்டும் கோவில் மற்றும் திருமடங்களை சேர்ந்த கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடப்பது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான யானைகள் புத்துணர்வு முகாம் இன்று மாலை தொடங்குகிறது. தொடர்ந்து 48 நாட்கள் இந்த முகாம் நடக்கிறது. அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைக்கின்றனர்.

    முகாமில் பங்கேற்க உள்ள யானைகள் அனைத்தும் நேற்று காலை முதலே தேக்கம்பட்டியில் உள்ள முகாம் நடைபெறும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தன.

    நேற்று மாலை வரை தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த 26 யானைகள் முகாமுக்கு வந்துள்ளன. முகாமுக்கு வந்த யானைகள் அனைத்தும் லாரியில் இருந்து இறங்கியதும் நீண்ட தூர பயணம் காரணமாக தண்ணீர் உள்ள குழாயை தேடி சென்று தங்களது தாகத்தை தீர்த்து கொண்டன. ஒரு சில கோவில் யானைகள் சந்தோ‌ஷ மிகுதியில் துதிக்கையால் மண்ணை அள்ளி தன் உடல் முழுவதும் மீது வீசி உற்சாகத்தை வெளிப்படுத்தியது.

    அதன் பின்னர் யானைகள் வனப்பத்ர காளியம்மன் கோவில் முன்பு அழைத்து செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் யானைகள் அனனத்தும் கலந்து கொண்டு துதிக்கையால் அம்மனை வழிபட்டன.

    தொடர்ந்து யானைகள் முகாம் நடைபெறும் இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டன.

    அங்கு சென்றதும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து கொண்டதால் ஒவ்வொரு யானைகளும் துதிக்கையால் கட்டித் தழுவி தங்களது அன்பை வெளிப்படுத்தின. முகாமில் பங்கேற்ற யானைகள் அனைத்தும் இன்று காலை நடைபயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டன. பின்னர் சவரில் குளிக்க சென்ற யானைகள் தண்ணீரை பீய்ச்சி அடித்து குளித்து மகிழ்ந்தன.

    முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு காட்டு யானைகளால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக முகாம் நடைபெறும் இடத்தை சுற்றிலும் 3 அடுக்கு மின்வேலி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×