search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை ஓய்ந்து ஒரு வாரமாகியும் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தில் சாலையில் வடியாத வெள்ள நீர்.
    X
    மழை ஓய்ந்து ஒரு வாரமாகியும் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தில் சாலையில் வடியாத வெள்ள நீர்.

    தூத்துக்குடியில் 50 டேங்கர் லாரிகள் மூலம் வெள்ளநீரை அகற்றும் பணி தீவிரம்

    கனமழை காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளநீர் வடியத் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் வீடுகளை சூழ்ந்துள்ளது.

    இதனால் மக்கள் அன்றாட தேவைகளுக்கு கூட வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரமாக மழை நின்று வெயில் அடித்தாலும் மாநகர பகுதியில் இன்னும் வெள்ளம் வடியாமல் உள்ளது. முக்கியமாக முத்தம்மாள்காலனி, குறிஞ்சி நகர், ரகுமத்நகர், ராம்நகர், நேதாஜி நகர், சின்னக்கண்ணுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள்ளும், வீடுகளை சூழ்ந்தும் தண்ணீர் உள்ளது.

    பாரதிநகர், பிரைண்ட்நகரின் அனைத்து தெருக்கள், போல்டன்புரம், திருச்செந்தூர் மெயின்ரோடு, அமுதாநகர், ராஜகோபால்நகர், பாரதிநகர், ஸ்டேட்பாங்க் காலனி உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீருடன் வெள்ளநீரும் சேர்ந்துள்ளதால் தண்ணீர் நிறம்மாறி பச்சை நிறத்தில் காணப்படுகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சில இடங்களில் மீண்டும் மழை பெய்தது. அதிகபட்சமாக திருச்செந்தூரில் 19 மில்லி மீட்டரும், காயல்பட்டிணத்தில் 6 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

    எனினும் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் வெயில் அடிக்க தொடங்கியது. மேலும் மாநகர பகுதியில் மழை பெய்யாததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    மாநகராட்சி சார்பில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் மூலம் மாநகராட்சி பகுதியில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக மாநகர பகுதியில் தொடர்ந்து வெயில் அடித்து வருவதால் தண்ணீரை அகற்றும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி கூடுதல் மின்மோட்டார்கள் மூலம் வெள்ளநீரை உறிஞ்சி அப்புறப்படுத்தி வருகின்றனர். வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலமாகவும் மெயின் சாலைகளில் தேங்கி தண்ணீரை உறிஞ்சும் பணி வேகமாக நடைபெறுகிறது.

    வெயிலின் தாக்கமும் அதிகரித்து இருப்பதால் சில இடங்களில் மழைநீர் வேகமாக வடிந்து வருகிறது. தற்போது சாலைகளில் உள்ள நீர் வடியும் நிலையில் பொதுமக்கள் வாடகைக்கு மின்மோட்டார் வாங்கி வீடுகளுக்குள் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

    கனமழை காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளநீர் வடியத் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.
    Next Story
    ×