search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சேலத்தில் பிளஸ்-2 மாணவியை தொடர்ந்து ஆசிரியைக்கும் கொரோனா தொற்று உறுதி

    சேலம் அருகே பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரத்தில் அரசு மாதிரி பள்ளி இயங்கி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு இருந்தன. தற்போது 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு கடந்த 19-ந் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் பெரியகிருஷ்ணாபுரம் அரசு மாதிரி பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கருமந்துறை பகுதியை சேர்ந்த அந்த மாணவிக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன. இதைத்தொடர்ந்து தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நேற்று மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

    இதைத்தொடர்ந்து நேற்று மருத்துவ குழுவினர், மாணவி படிக்கும் பெரிய கிருஷ்ணாபுரம் அரசு மாதிரி பள்ளிக்கு சென்று அந்த மாணவியை 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த மாணவி கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் அந்த மாணவி தங்கி இருந்த விடுதியில் உடனிருந்த 36 மாணவிகளுக்கும், பள்ளியில் பணியாற்றி வரும் 7 ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து மற்ற மாணவிகளின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுடைய பொறுப்பில் மாணவிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.

    மாணவி பயின்ற மாதிரி பள்ளி மற்றும் அவர் தங்கியிருந்த விடுதி, பெரியகிருஷ்ணாபுரம் உயர்நிலைப்பள்ளி விடுதி என 2 விடுதிகளும் தற்காலிகமாக மூடப்படுவதாக கல்வித்துறை அறிவித்தது.

    இந்தநிலையில், சேலம் பெரமனூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை, சேலம் கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியை மாணவிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். அந்த ஆசிரியைக்குக் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டார். இந்தப் பரிசோதனையில் அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரைத் தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    ஆசிரியைக்கு கொரோனா தொற்று பரவியதை அடுத்து, பள்ளியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதாரத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    சேலம் பெரியகிருஷ்ணாபுரம் அரசு மாதிரி பள்ளியைச் சேர்ந்த  பிளஸ்-2 மாணவிக்கு நேற்று (21-ம் தேதி) கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சேலம் கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு இன்று கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதால் பெற்றோர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
    Next Story
    ×