search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்ஜிஆர்
    X
    எம்ஜிஆர்

    3 நாட்கள் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்

    டாக்டர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 3 நாட்கள், எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. நிறுவனத் தலைவர், புரட்சித் தலைவர் ‘பாரத் ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 3 நாட்கள், ‘எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களிலும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா ஆகிய பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

    கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் அனைவரும், தத்தமது மாவட்டங்களில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

    மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தை, கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக்குழுவினருடன் தொடர்பு கொண்டு, எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வேண்டும்.

    அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    இதன்படி சென்னை புறநகர் மாவட்டம் சார்பில் வருகிற 19-ந்தேதி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றுகிறார்.

    தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம் சார்பில் வருகிற 17-ந்தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    இதேபோல் தமிழ்நாடு முழுவதும் பேசுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    கழகத்தின் சார்பில் நடைபெறும் அனைத்துப் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கும் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முக கவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பங்குபெறும் வகையில், அதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×