search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடுரோட்டில் பிச்சைக்காரர் ஒருவரை சக பிச்சைக்காரர் ஒருவர் சரமாரியாக கட்டையால் தாக்கும் காட்சி
    X
    நடுரோட்டில் பிச்சைக்காரர் ஒருவரை சக பிச்சைக்காரர் ஒருவர் சரமாரியாக கட்டையால் தாக்கும் காட்சி

    நடுரோட்டில் பிச்சைக்காரர் அடித்துக்கொலை- சக பிச்சைக்காரர் வெறிச்செயல்

    பிச்சைக்காரர்களிடையே ஏற்பட்ட மோதலில் முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி அருகே சிலர் பிச்சை எடுத்து, அங்கேயே தங்கியிருந்து வருகிறார்கள். அவர்களில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவரும் பிச்சை எடுத்து வந்தார். இந்தநிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் (65) என்ற முதியவர் கடந்த சில தினங்களாக பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி பகுதியில் உள்ள பிச்சைக்காரர்களுடன் இணைந்து பிச்சை எடுத்து வந்ததாக தெரிகிறது.

    இந்தநிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் குமரி மாவட்ட முதியவரும், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முதியவரும் சேர்ந்து பிச்சை எடுக்கச் சென்றனர். அப்போது அந்த கடைக்காரர் 2 ரூபாய் கொடுத்து ஆளுக்கு ஒரு ரூபாய் வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதை பங்கு வைப்பது தொடர்பாக நடுரோட்டில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ், தான் வைத்திருந்த உருட்டுக் கட்டையால் அந்த முதியவரை சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த அவருக்கு தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை அந்த பகுதியில் நின்றவர்கள் படம் பிடித்து வாட்ஸ்-அப்பில் பரவ விட்டனர்.

    அதே சமயத்தில் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். கொலையான முதியவர் பெயர், முகவரி உடனடியாக தெரியவில்லை. அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிச்சைக்காரர்களிடையே ஏற்பட்ட மோதலில் முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×