search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    விழுப்புரம் அருகே மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை கைது

    விழுப்புரம் அருகே மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தையை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதங்களாக அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் சிறுமியை சிகிச்சைக்காக அவரது தாயார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதை கேட்டதும், அதிர்ச்சியடைந்த தாயார், இது குறித்து தனது மகளிடம் கேட்டார். அதற்கு சிறுமி, வாலிபர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர் யார் என்று தனக்கு தெரியவில்லை என்றும் கூறினார். இதையடுத்து அவரது தாய், தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் அந்த கிராமத்திற்கு சென்று, சில வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். ஆனால், யாரும் சிக்கவில்லை. இதை தொடர்ந்து போலீசாருக்கு, சிறுமியின் மீது சந்தேகம் ஏற்பட்டது. யாரையோ காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உண்மையை மறைப்பதாக கருதினர். அதன்படி, சிறுமியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், வேலியே பயிரை மேய்ந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது, பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவரது தந்தையே இந்த கொடூர செயலில் ஈடுபட்டு, மகளின் வாழ்க்கையை சீரழித்து இருப்பது தெரியவந்தது.

    பின்னர், சிறுமியின் தந்தையை பிடித்து போலீசார் விசாரித்ததில், அவரும் தவறை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×